தமிழ்நாடு இனி கருணாநிதி நாடு.. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்..!

சென்னை, கிண்டியில் நடைபெற்ற நெடுஞ்சாலைத் துறையின் பவள விழாவில் கலந்துகொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், “சென்னை கிழக்கு கடற்கரை சாலை இனி ‘முத்தமிழறிஞர் கலைஞர் சாலை’ என அழைக்கப்படும்” என்று அறிவித்தார்.
இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “அம்மா உணவகங்களை குறைத்து கருணாநிதி உணவகங்கள் அதிகரிக்கும் பணி நடைபெறுகிறது. பொது மக்களே இதை விரும்ப மாட்டார்கள்.
சென்னை கிழக்கு கடற்கரை சாலை இனி ‘முத்தமிழறிஞர் கலைஞர் சாலை’ என அழைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். கூடிய விரைவில், தமிழ்நாடு கருணாநிதி நாடு என்று கூட மாற்றப்படலாம்.
தமிழக மக்கள் திமுக மீது வெறுப்பில் உள்ளனர். தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு பிரச்னை உள்ளது. மக்கள் கொதித்து போய் உள்ளனர். அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் மகத்தான வெற்றியை மக்கள் எங்களுக்கு கொடுப்பார்கள்.
தமிழ் நமது ஆட்சி மொழியாக உள்ளது. ஆங்கிலம் இணைப்பு மொழியாக உள்ளது. திமுக மும்மொழி கொள்கையை நேரடியாக ஆதரிக்கிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இரு மொழிக் கொள்கை தான்” என்று அவர் கூறினார்.