1. Home
  2. தமிழ்நாடு

மீண்டும் மின் கட்டணத்தை உயர்த்தும் தமிழ்நாடு அரசு... அன்புமணி கொடுத்த ஷாக்..!

1

வேலூரில் மாவட்ட பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்று பேசினார்.

பொதுக்குழு கூட்டத்தில், வேலூர் மாநகர சாலைகளை சரி செய்து போக்குவரத்து நெரிசலை போக்க வேண்டும், வேலூர் மாவட்டத்தில் தலைவிரித்தாடும் கஞ்சா நடமாட்டத்தை தடுக்க வேண்டும், அணைக்கட்டு மேலரசம்பட்டு பகுதியில் அணைக்கட்டும் பணியை விரைவுபடுத்த வேண்டும், கே.வி.குப்பம் தொகுதிக்கு ஒகேனக்கல் கூட்டு குடிநீர் தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட வேலூர் மாவட்ட நலன் சார்ந்த ஒன்பது தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னர் கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி கூறுகையில், "இன்று நாம் நிறைவேற்றிய தீர்மானத்தை பலமுறை போட்டு அரசுக்கு கொண்டு சென்றோம். ஆனால் தமிழ்நாடு அரசு தூங்கிக்கொண்டிருக்கிறது. தமிழ்நாடு பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறது. மக்கள் விரோத திமுகவை அகற்ற வேண்டும். நம்மோட கட்சியை இன்னும் பலப்படுத்த வேண்டும். அடித்தட்டு பின்தங்கிய மக்களை மேம்படுத்த எந்த திட்டமும் திமுகவிடம் இல்லை. சமூக நீதியை நடைமுறைபடுத்த தவறியது திமுக.

கிராமங்களில் கிளைகளை புதுப்பித்து உறுப்பினர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும். ஜூலை 25ஆம் தேதி ஐயா (ராமதாஸ்) பிறந்த நாளில் பசுமை தாயக நாளில் தமிழக மக்களின் உரிமைகளை மீட்டெடுக்க நடைபயணம் மேற்கொள்ள உள்ளேன். இந்த உரிமைகளை மீட்டெடுத்தால் தமிழகம் இந்தியாவோடு அல்ல சிங்கப்பூரோடு போட்டி போடும் அளவுக்கு இருக்கும்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் அந்த கால ராஜா போல், "அமைச்சரே மாதம் மும்மாறி பெய்கிறதா" என கேட்கிறார். அவருக்கு எதுவும் தெரியாது. ஏதோ ஆள் செட் பண்ணி ரோட் ஷா போகிறார். மக்களின் உண்மையான கஷ்டம் தெரிய வேண்டும் என்றால் கிராமத்திற்கு சென்று பெண்கள், விவசாயிகளிடம் கேட்டு பார்க்க வேண்டும்.

கல்லணையில் தண்ணீர் திறப்பது அங்குள்ள பொதுப்பணித்துறை அதிகாரியின் வேலை. அது முதல்வர் வேலை அல்ல. ஏதோ வரலாற்றிலே முதல்முறையாக என புதிது போல் பேசிகிறார்கள். இன்னும் வெள்ளைக்காரன் காலத்திலேயே இருக்கிறார்கள். வெறும் விளம்பரம் மட்டுமே செய்கிறார்கள்.

முதலமைச்சர் அமெரிக்க போனது எதற்காக எனக்கு தெரியும்?. வேலூரில் இன்றும் 110 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெயில் கொளுத்துகிறது. அரசு அனுமதி கொடுத்தால் பசுமை தாயகம் மூலம் 10 லட்சம் மரங்களை நடுவோம். அடுத்த பத்து ஆண்டில் 110 டிகிரிக்கு வெயில் இருக்காது, அதனை குறைத்துக் காட்டியிருப்போம். 

பாலாறு குறித்து பேசும் ஒரே கட்சி பாமக தான். இதைப் பற்றி வேறு யாரும் பேச மாட்டார்கள். 1996ஆம் ஆண்டில் பாலாற்றைக்காக வாணியம்பாடியில் இருந்து வாலாஜா வரை மூன்று நாள் சைக்கிள் பயணம் மேற்கொண்டவர் ராமதாஸ். இதுவரை பாலாற்றில் 23 தடுப்பணைகளை கட்டி இருக்க வேண்டும். ஆனால் தற்போது வரை மூன்று தான் கட்டியிருக்கிறார்கள்.

சித்திரை முழு நிலவு மாநாட்டை பார்த்து திமுக அரண்டு போய், பயந்து போய் உள்ளது. அந்த மாநாட்டில் என்ன என்னமோ நடக்கும் என எதிர்பார்த்தார்கள். அதெல்லாம் அந்த காலம். இட ஒதுக்கீடு வழங்குகிறேன் என ஏமாற்றிய திமுகவிற்கு ஒட்டுமொத்த வன்னியர் சமூகம் வரும் தேர்தலில் தக்க பாடம் புகட்ட வேண்டும். இந்த சமுதாயத்திற்க்கு துரோகம் செய்து வருவது திமுக. ஒவ்வொரு முறை ஆட்சிக்கு வருவது இந்த சமுதாயத்தை நம்பித்தான். 23 உறுப்பினர்கள் வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர்கள், 21 பேர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் இரண்டு சமூகத்திற்கும் துரோகத்தை செய்து வருகிறது திமுக.

இதுகுறித்து மேடை போடுங்கள்... இரண்டு சமூகத்திற்கு என்ன செய்தீர்கள் என பேச நான் வருகிறேன். நீங்கள் ஆட்சிக்கு வர காரணமான இந்த இரண்டு சமூகத்திற்கு என்ன செய்துள்ளீர்கள். உங்களை சுற்றி இருப்பது வியாபாரிகள் தான். இந்த இரண்டு சமூகத்தை தூக்கி குப்பையில் எரித்துள்ளார்கள். இன்னும் பத்து மாதத்தில் தெரியும், இவற்றையெல்லாம் வெளிச்சம் போட்டு காட்ட போகிறேன். இதனால் தான் திமுக திட்டம் போட்டு சதி செய்தது, மனதுக்குள் நிறைய இருக்கிறது. அதையெல்லாம் வெளியில் சொல்ல முடியாது எல்லாம் சரியாகிவிடும் பார்த்துக் கொள்ளலாம்.

ஜூலை ஒன்றாம் தேதி முதல் 3.5 விழுக்காடு மின் கட்டணம் நான்காவது முறையாக உயர்த்தப்பட உள்ளது. நான்கு முறை மின் கட்டணத்தை உயர்த்திய கொடுங்கோள் ஆட்சி திமுக ஆட்சி. மாம்பழம் விலைச்சல் இருந்தும் இந்த முறை விலையில்லாமல் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர். ஆந்திராவில் தமிழக மாங்காய்களை வாங்க மறுக்கிறார்கள். இதபற்றி முதல்வர் கண்டுகெள்ளாமல் ரோட் ஷோ போகிறார். வேலூர் மாநகராட்சி என சொல்லவே அசிங்கமா இருக்கு. நகராட்சி அளவில் கூட இல்லை. ஸ்மார்ட் சிட்டிக்கான ஆயிரம் கோடி பாலாற்றில் போய்விட்டது" என்றார்.

Trending News

Latest News

You May Like