தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு : இரண்டு மடங்காக உயர்ந்த உதவித்தொகை.!

தினந்தோறும் ஒவ்வொரு துறை மீதான மானிய கோரிக்கை தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடத்தப்பட்டு புதிய அறிவிப்புகள் வெளியிடப்படுகிறது. அந்த வகையில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதில், தாய்மொழி, தாய்நாடு என்று பெருமிதமாக சொல்லும் வண்ணம் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் தலைமையில் 2010-ஆம் ஆண்டு கோவையில் செம்மொழி மாநாடு நடைபெற்றது. அந்த மாபெரும் விழாவினை எந்நாளும் நினைவில் கொள்ளும் வகையிலும், தமிழன்னைக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் முகமாகவும் கோவையில் உள்ள செம்மொழிப் பூங்காவில் தமிழ்த்தாய் சிலை நிறுவப்படும்.
உதவித்தொகை இரண்டு மடங்காக அதிகரிப்பு
தமிழ்மொழியின் மீதும் தமிழ்நாட்டின் மீதும் பற்றுக்கொண்டு ஆற்றிய அளப்பரிய பங்களிப்பினைப் போற்றும் விதமாக தற்போது திங்கள்தோறும் வழங்கப்படும்
உதவித் தொகையினை
1. தமிழறிஞர்களுக்கு ரூ.4,500/-லிருந்து ரூ.7,500/- ஆகவும்
2. அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு ரூ.3,500/-லிருந்து ரூ.7,500/- ஆகவும்
3. எல்லைக் காவலர்களுக்கு ரூ.5,500/-லிருந்து ரூ.7,500/- ஆகவும் உயர்த்தி வழங்கப்படும். இதற்கென தொடர் செலவினமாக ரூபாய் 3 கோடியே 90 இலட்சத்து 60 ஆயிரம் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்படும்.
தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும் மறுமலர்ச்சிக்கும் தொண்டாற்றும் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு தற்பொழுது, ஆண்டுதோறும் 100 தமிழறிஞர்கள் தெரிவு செய்யப்பட்டு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த எண்ணிக்கை ஆண்டுக்கு 150-ஆக உயர்த்தப்படும். இதற்கென ஆண்டுதோறும் தொடர் செலவினமாக ரூபாய் 48 இலட்சம் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்படும்.
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த தமிழ் முதுகலைப் பட்ட வகுப்பில் பயிலும் மாணவர்களில் தேர்வின் அடிப்படையில் 15 மாணவர்களுக்கு திங்கள்தோறும் கல்வி உதவித் தொகையாக ரூ.2,000/- வீதம் வழங்கப்படும். இதற்கென ஆண்டுதோறும் தொடர் செலவினமாக ரூபாய் 18 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்படும். விடுதியில் தங்கிப்பயிலும் 45 மாணவர்களுக்கு 2025-2026 கல்வியாண்டு முதல் உணவு வழங்க ஏதுவாக ரூபாய் 12 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்படும்.
செயற்கை நுண்ணறிவுக் காலத்திற்கேற்பத் தமிழ் மொழியை வளர்த்தெடுக்கத் தேவைப்படும் தமிழ்த் தரவக உருவாக்கம், சிறப்புக் கலைக் களஞ்சியங்கள் போன்ற திட்டப் பணிகளைத் தமிழ் வளர்ச்சிக் கழகம் மேற்கொள்ளவும் தொடர்ந்து தொய்வின்றிச் செயற்பட உதவும் வகையில் வைப்புத் தொகையாக ரூபாய் 2 கோடி வழங்கப்படும்.
தமிழ்நாடு அரசால் இதுவரை 189 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமை செய்யப்பட்டு அவரது மரபுரிமையருக்கு ரூபாய் 15.32 கோடி நூலுரிமைத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது. அவ்வரிசையில் 10 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமை செய்யப்படும். இதற்கென தொடராச் செலவினமாக ரூபாய் 1 கோடியே 1 இலட்சத்து 50 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்படும்.
புதுதில்லியில் ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் பன்னோக்கு கலையரங்கத்தின் அருகில் உலகப் பொதுமறை தந்த அய்யன் திருவள்ளுவரின் சிலை நிறுவப்படும். இதற்கென தொடராச் செலவினமாக ரூபாய் 50 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்படும்.
கவிக்கோ அப்துல் ரகுமான் பிறந்த நாளான நவம்பர் 9-ஆம் நாளினை தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் மாவட்ட அளவில் அரசு விழாவாகக் கொண்டாடப்படும்.
அறிவியல் தமிழறிஞர் மணவை முஸ்தபா அவர்களின் பிறந்த நாளான ஜூன் 15-ஆம் நாளினை தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் மாவட்ட அளவில் அரசு விழாவாகக் கொண்டாடப்படும்.