மகப்பேறு விடுப்பு: முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு..! இனி பெண் ஊழியர்களுக்கு சிக்கல் இல்லை..!

கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பெண் ஊழியர்களுக்கான மகப்பேறு விடுப்பு காலங்கள் பதவி உயர்வுக்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் உள்ளிட்ட அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் மகப்பேறு விடுப்புக் காலம், தகுதிகான பருவத்தில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என தமிழக அரசு இன்று (மே 29) அரசாணை வெளியிட்டுள்ளது.
அதில், “தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், 28.04.2025 அன்று நடைபெற்ற 2025-2026-ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையின்போது திருமணமான அரசு பெண் பணியாளர்களுக்கு மகப்பேறுக்காக ஒன்பது மாதகாலமாக இருந்த விடுப்பு 01.07.2021 முதல் ஓராண்டு காலமாக உயர்த்தப்பட்டு, ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு அரசால் வழங்கப்பட்டு வருகிறது என்றும்,
ஆனால், தற்போதுள்ள விதிகளின்படி மகப்பேறு விடுப்புக் காலம் தகுதிகான பருவத்திற்கு (Probation period) கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை என்றும், இதன் காரணமாக அரசுப் பணிகளில் பணியாற்றிவரும் பல்லாயிரக்கணக்கான இளம்மகளிர் மகப்பேறு விடுப்பு எடுத்தால், தகுதிகான பருவம் உரிய காலத்திற்குள் முடிக்க இயலாமல் அவர்களுடைய பதவி உயர்வு பாதிக்கப்படுவதுடன், பணிமூப்பினை இழக்கும் நிலையும் ஏற்படுகிறது என்றும்,
மகளிர் முன்னேற்றத்திற்காக அனைத்து முயற்சிகளையும் எடுத்துவரும் இந்த அரசு, அரசுப் பணிகளில் பணியாற்றி வரும் மகளிரின் பணி உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில், இனிவரும் காலங்களில் அரசு பெண் பணியாளர்கள் மகப்பேறு விடுப்பு காலத்தினை அவர்களது தகுதிகான பருவத்திற்கு கணக்கில் எடுத்துக்கொள்ளலாம் என்றும் சட்டமன்றப் பேரவை விதிகளில் விதி 110-இன்கீழ் முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டார்.
இந்த அறிவிப்பின் படி கீழ்கண்ட ஆணைகள் வெளியிடப்படுகின்றன…
திருமணமான அரசு பெண் பணியாளர்கள் தகுதிகான பருவகாலத்தின் போது துய்க்கும் மகப்பேறு விடுப்புக் காலம் அவர்களது தகுதிகான பருவத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும்.
சிறப்பு / தற்காலிக விதிகளில் வரையறுக்கப்பட்டுள்ள தகுதிகான பருவ பணிக்காலம் (duty period) 28.04.2025 அன்று முடிவுறாதவர்களுக்கு இச்சலுகை பொருந்தும்.
இது தொடர்பாக, தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் (பணி நிபந்தனைகள்) சட்டம், 2016-ற்கு உரிய திருத்தங்கள் பின்னர் வெளியிடப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.