காவல் துறைக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை..! இனி கடமை தவறினால் அவ்வளவு தான்..!

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தலைமைச் செயலாளர், காவல்துறை தலைமை இயக்குநர் உள்ளிட்ட காவல்துறை உயர் அலுவலர்கள் நேரடியாகவும், தமிழ்நாட்டின் மத்திய, மேற்கு மற்றும் தெற்கு மண்டல காவல்துறை தலைவர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாகவும் முதல்வர் ஆய்வு மேற்கொண்டார்.
தமிழ்நாட்டில் மண்டல வாரியாக பதிவான குற்றங்கள் குறித்தும், அவைகள் மீது எடுக்கப்பட்ட உடனடி நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார். நீதிமன்றங்களில் விசாரணையில் உள்ள வழக்குகள் குறித்தும் கேட்டறிந்தார். காணொலி காட்சி வாயிலாக பங்கேற்ற மண்டல காவல்துறை தலைவர்கள் தங்கள் மண்டலங்களில் குற்றத்தடுப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட புதிய முயற்சிகள் குறித்து முதலமைச்சரிடம் விளக்கி கூறினார்கள்.
ஆய்வு கூட்டத்தில் அதிகாரிகளிடம் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு, பொது அமைதியை மிக கவனமாக கையாண்டு வருகிறது. அரசால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மூலம் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி, தொழில் முதலீடு, புதிய தொழிற்சாலைகள், புதிய வேலைவாய்ப்புகள் போன்றவை அதிகரித்துள்ளது. அத்துடன் அனைத்து தரப்பு மக்களும் அமைதியாக வாழ்கின்ற மாநிலமாக தமிழ்நாடு திகழ்கின்றது. இதற்கு காவல்துறையின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாக விளங்குகின்றது.
மேலும், காவல் நிலையங்களுக்குப் புகார் கொடுக்க வருகின்ற அனைத்து பொதுமக்களிடமும் கண்ணியத்தோடு நடந்து கொண்டு, அவர்களது புகார்கள் மீது குறிப்பிட்ட காலத்திற்குள் உரிய நடவடிக்கைள் மேற்கொள்ள வேண்டும். கஞ்சா, கள்ளச்சாராய வழக்குகளில் கைது செய்யப்படும் குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை பெற்றுத்தர தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். போதைப் பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவும் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
சட்டம் ஒழுங்கு தொடர்பாக முக்கியப் பிரச்னைகள் ஏற்படும்போது தொடர்புடைய காவல்துறை உயர் அலுவலர்கள் உடனடியாக ஊடகங்களை சந்தித்து அந்த பிரச்னை குறித்து தெளிவாக விளக்கம் அளித்து, வதந்திகள் பரவுவதை தடுக்க வேண்டும். அது காவல்துறையின் மீதான நம்பிக்கையை நிலைநிறுத்தவும் உதவும். சாதி மற்றும் சமய பூசல்களில் ஈடுபடுவர்கள், வதந்தி மற்றும் வெறுப்புணர்வை பரப்பி பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர்கள் ஆகியோர் மீது பதிவு செய்யப்படும் வழக்குகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
பொது இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்துவது, குற்றத்தடுப்பு நடவடிக்கைகளில், சமுதாயத்தின் பங்களிப்பை ஊக்குவிப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு குற்றச் செயல்கள் நடக்காமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். காவல் துறையினர் சுதந்திரமாக செயல்பட முழுமையாக அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், சட்டம் ஒழுங்கை பேணிப் பாதுகாத்து, நீதியை நிலைநாட்ட வேண்டும்," என அறிவுறுத்தினார்.
இந்த நிலையில் ஆய்வு கூட்டம் குறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "குற்றங்கள் நடக்காமல் தடுக்கப்பட வேண்டும்! மீறி நடந்தால் அதில் ஈடுபட்டவர் ரவுடியானாலும், அரசியல் பின்புலம் கொண்டவரானாலும், காவலரே ஆனாலும் அதற்கான தண்டனையை விரைவில் பெற்றுத் தந்து நீதி நிலைநாட்டப்படும் ஆட்சியாகத்தான் திராவிட மாடல் அரசு திகழ்ந்து வருகிறது. 'போதைப் பொருள் - கள்ளச்சாராயம், பெண்கள் பாதுகாப்பு, லாக்கப் மரணங்கள் போன்றவற்றில் யார் கடமை தவறினாலும் அரசின் நடவடிக்கை மிக மிக கடுமையாக இருக்கும்' என்பதைச் சட்டம் - ஒழுங்கு குறித்த இன்றைய ஆய்வுக் கூட்டத்தில் வலியுறுத்தினேன்,"எனக் கூறியுள்ளார்.
இக்கூட்டத்தில், தலைமைச் செயலாளர் முருகானந்தம், உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ் குமார், காவல் துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால், பொதுத் துறை செயலாளர் ரீட்டா ஹரீஷ் தக்கர், காவல்துறை கூடுதல் இயக்குநர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) டேவிட்சன் தேவாசிர்வாதம், பெருநகர சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.