1. Home
  2. தமிழ்நாடு

500 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை : அஸ்வினுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

Q

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் 3வது டெஸ்ட் போட்டி நேற்று துவங்கி நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து, 445 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்தியா சார்பில் ரோகித் ஷர்மா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சதம் அடித்து அசத்தினர். இங்கிலாந்து அணி தரப்பில் மார்க் வுட் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸை தொடங்கி விளையாடி வருகிறது. இதில் 13வது ஓவரை வீசிய இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், ஜாக் கிராலியின் விக்கெட்டை வீழ்த்தினார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 500 விக்கெட்டுகளை அஸ்வின் வீழ்த்தியுள்ளார். இதன் மூலம் 500 விக்கெட்களுக்கும் மேல் வீழ்த்திய வீரர்களின் பட்டியலில் அவர் 9வது வீரராக இணைந்துள்ளார். இந்த பட்டியலில் இலங்கை அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் 800 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் உள்ளார் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள மற்றொரு இந்தியரான அனில் கும்ப்ளே, 619 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இந்நிலையில் அஸ்வின் சாதனைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார் இது தொடர்பாக எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ”சாதனைகளை உடைத்து கனவுகளை நனவாக்கும் சென்னையின் சொந்த பையன் அஸ்வின். ஒவ்வொரு திருப்பத்திலும் அவர் உறுதிப்பாடு மற்றும் திறமையின் கதைகளை பின்னுகிறார். இது ஒரு உண்மையான மைல் கல்லைக் குறிக்கிறது. கிரிக்கெட் வரலாற்றில் தனது 500வது டெஸ்ட் விக்கெட்டை சிறப்பாக பெற்ற அஸ்வினின் மாயாஜால சுழலுக்கு வாழ்த்துக்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Trending News

Latest News

You May Like