தமிழக முதல்வர் ஸ்டாலினின் அன்பான வேண்டுகோள்..!
தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை, மொழி, சாதி, சமயப் பாகுபாடு எதுவுமின்றி கொண்டாடப்படும் சமத்துவ விழா. இப்பொங்கல் விழாவிற்கு முன்னேற்பாடாக கிட்டத்தட்ட பத்துநாட்களுக்கு முன்பிருந்தே வீட்டைச் சுத்தப்படுத்துவது,வெள்ளையடிப்பது, பழையன கழிவது என தடபுடலாகப் பொங்கலை வரவேற்கும் நிகழ்வுகள் நடைபெறும். பெரும்பாலான பள்ளி, கல்லூரி மற்றும் பொதுநிறுவனங்களிலும் சமத்துவத்தை நிலைநாட்டும் நோக்கில் இப்பொங்கல் முன்விழா மகிழ்ச்சியோடு, சமத்துவப் பொங்கலாகக் கொண்டாடப்படுகிறது. சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரையும் இத்தித்திக்கும் பொங்கல் குதூகலத்தால் நிறைத்துவிடுகிறது.
அதிலும் சிறப்பாக, புதிதாகத் திருமணமான ஜோடிகளின் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது. அதற்கு முக்கியக் காரணம் திருமண வாழ்க்கையின் முதல் பொங்கலைச் சந்திக்கும் மணமக்களுக்காகப் பெண் வீட்டிலிருந்து கொடுக்கப்படும் பொங்கல் சீதனம்தான். இதை ‘பொங்கல் படி’ என்பர். தங்கள் இல்லத்தில் பொங்கல் விடப்படுகிறதோ இல்லையோ புகுந்த வீட்டில் தங்களுடைய மகள் சிறப்பாகப் பொங்கலிட்டு மகிழ்ந்திருக்க வேண்டும் என்கிற அதீத பாசமே இதற்கான அடிப்படைக் காரணம். விருந்தோம்பல், உபசரித்தல், பிறர்நலம் பேணல் போன்ற மானுடத்தின் அறப்பண்புகளைத் தலைமுறை தலைமுறையாகக் கடத்திவரும் ஓர் உயர்ந்த பண்பாட்டின் சுருக்கமான குறியீட்டு வடிவமாகவே இப்பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பொதுமக்களுக்கு ஒரு அன்பு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில்,
அனைவரும் தங்களின் இல்லங்களில் 'சமத்துவப் பொங்கல்' எனக் கோலமிட்டு, அதை சமூக வலைத்தளங்களில் பகிருங்கள். அதுதான் தலைநகரில் பொங்கல் கொண்டாடும் எனக்கு நீங்கள் தரும் இனிப்பான பொங்கல் வாழ்த்தாகும்"
மேலும் திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பொங்கல் வாழ்த்து செய்தியில்
பொங்கல் கொண்டாட்டம் தரும் ஊக்கத்தோடு,நமக்குக் காத்திருக்கும் பணிகள் இரண்டு! தாய்த் தமிழ்நாட்டை மேம்படுத்துவது முதலாவது. இந்திய ஒன்றிய அரசில் சமூகநீதி - சமதர்ம மதச்சார்பற்ற நல்லரசை அமைப்பது இரண்டாவது. இவை இரண்டையும் அடைய எந்நாளும் பாடுபடுவோம்"