புதிதாக கட்டப்பட்ட 1,591 வீடுகளை இன்று திறந்து வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்..!

தமிழகத்திலுள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிப்போருக்காக தமிழக அரசு சார்பில் வீடு கட்டும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் வேலூரை அடுத்த மேல்மொணவூரில் தொடங்கி வைத்தார். இந்தத் திட்டத்தின் கீழ் முதல்கட்டமாக ரூ.142.16 கோடியில் மொத்தம் 3,510 வீடுகள் கட்டும் பணி தொடங்கப்பட்டது.
தற்போது கட்டி முடிக்கப்பட்ட வீடுகளை பயனாளிகளிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி வேலூரை அடுத்த மேல்மொணவூரிலுள்ள இலங்கைத் தமிழர் முகாமில் இன்று காலை நடக்கிறது. இதில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று காணொலிக் காட்சி மூலம் 13 மாவட்டங்களில் உள்ள 19 இலங்கைத் தமிழர் முகாம்களில் மொத்தம் ரூ.79.70 கோடியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள 1,591 புதிய வீடுகளை திறந்து வைக்கிறார். மேலும், மேல்மொணவூர் முகாமில் ரூ.11 கோடி மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ள 220 வீடுகளையும் பயனாளிகள் வசம் ஒப்படைக்க உள்ளார்.