1. Home
  2. தமிழ்நாடு

இந்தியாவின் 2-வது பாகன் கிராமத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

1

தமிழக அரசு வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:- முதல்வர்  மு.க. ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சார்பில் கோயம்புத்தூர் மாவட்டம், ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள கோழிக்கமுத்தி யானைகள் முகாமில், பாகன்கள் மற்றும் யானை பராமரிப்பாளர்களின் நலனுக்காக 5.40 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட 47 பணியாளர் குடியிருப்புகள் கொண்ட இந்தியாவின் இரண்டாவது யானை பாகன் கிராமத்தை திறந்து வைத்தார். மேலும், யானைகளை பராமரிக்கும் காவடி பணியிடங்களுக்கு 6 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காட்டில் இந்தியாவின் முதல் யானை பாகன் கிராமம் 13.5.2025 அன்று முதல்வரால் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, யானைகளின் பராமரிப்பு மற்றும் தோழமைக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணிக்கும் பாகன்கள் மற்றும் காவடிகளின் தன்னலமற்ற சேவை அங்கீகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அதன் தொடர்ச்சியாக, கோழிக்கமுத்தி யானைகள் முகாமில், பாகன்கள் மற்றும் யானை பராமரிப்பாளர்களின் நலனுக்காக 5.40 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட 47 பணியாளர் குடியிருப்புகள் கொண்ட இந்தியாவின் இரண்டாவது யானை பாகன் கிராமத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.

இந்தியாவின் பழமையான யானை முகாமில் ஒன்றான கோழிக்கமுத்தி யானைகள் முகாம், யானை மேலாண்மையில் பல தலைமுறைகளாக பாரம்பரிய அறிவைப் பெற்ற பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த யானைப் பாகன்களின் இருப்பிடமாகும். இந்த முகாமில் தற்போது 24 யானைகள் உள்ளன. முதல்வரின் வழிகாட்டுதலின்படி, இம்முகாம்களில் பாதுகாப்பு விழிப்புணர்வை ஊக்குவிப்பதற்காக யானைகளைப் பார்க்கும் காட்சியகம் மற்றும் பார்வையாளர் நடைபாதை போன்ற நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டுள்ளன.

ஒரு முன்னோடி முயற்சியாக, மாநில திட்டக்குழு நிதியிலிருந்து இம்முகாமில் 3.50 கோடி ரூபாய் செலவில் பேட்டரி ஆற்றல் சேமிப்பு அமைப்பு கொண்ட சூரிய சக்தியில் இயங்கும் மைக்ரோ-கிரிட் நிறுவப்பட்டுள்ளது. இந்த அமைப்பில் 124 கி.வாட். சூரிய சக்தி ஆலை, 516 கி.வாட். பேட்டரி வங்கி மற்றும் 100 கி.வாட் இன்வெர்ட்டர் ஆகியவை அடங்கும், இது யானை முகாம் மற்றும் 47 யானைப் பாதுகாவலர் வீடுகளுக்கு தடையற்ற பசுமை மின்சார விநியோகத்தை உறுதி செய்கிறது. மேகமூட்டமான அல்லது மழைக்காலங்களிலும் இந்த அமைப்பு இரண்டு நாட்கள் மின்னாற்றலை வழங்குகிறது, இது அக்கிராமத்தை பசுமை மின்சாரம், நிலையான வாழ்க்கை மற்றும் இயற்கையுடன் இணக்கமான ஒரு வாழ்க்கை மாதிரியாக மாற்றுகிறது. இது நாட்டில் புலிகள் காப்பக நிர்வாகத்தில் சிறந்த நடைமுறைகளில் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் ஆனைமலை புலிகள் காப்பகம் ஆகியவற்றில் காலியாகவுள்ள காவடி பணியிடங்களை நிரப்பிடும் வகையில் 6 நபர்களுக்கு முதல்வர்  நேற்று பணி நியமன ஆணைகளை வழங்கினார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like