தூய்மை பணியாளர்களுக்கு காலை இலவச உணவு - தமிழக அமைச்சரவை ஒப்புதல்!
முக ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் காலையில் கூடியது. இதில் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பேசப்பட்டது. பல்வேறு திட்டங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளது. அதில் முக்கியமாக தூய்மை பணியாளர்களின் போராட்டம் தொடர்பாகவும் பேசப்பட்டது.
இந்த அமைச்சரவை கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் உள்பட அனைத்து துறை அமைச்சர்களும் கலந்து கொண்டனர். தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு திட்டங்கள் தொடர்பாகவும், தமிழக அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் தொடர்பாகவும் அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது
தூய்மை பணியாளர்களுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு திட்டம் கொண்டு வரப்படும். 3 ஆண்டுகளில் தூய்மை பணியாளர்களுக்கு வீடுகள் வழங்கப்படும். சுய தொழில் தொடங்க 3.5 லட்சம் மானியம் வழங்கப்படும். 6 சதவீதம் வட்டி மானியம்.
தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு இலவசமாக வழங்கப்படும். தூய்மை பணியாளர்களின் குழந்தைகள் உயர்கல்வி பயில புதிய உதவி தொகை திட்டம் செயல்படுத்தப்படும். தூய்மை பணியாளர்கள் உயிரிழந்தால் 5 லட்சம் காப்பீடு உள்பட 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும். தூய்மை பணியாளர்களுக்கு 6 முக்கிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து அவர் கூறுகையில், தமிழக அரசு பேச்சுவார்த்தைக்காக எப்போது கதவை திறந்து வைத்துள்ளது. நேற்று இரவு வரை பேச்சுவார்த்தை நடைபெற்ற வண்ணம் தான் இருந்தது. நீதிமன்ற உத்தரவு படியே அவர்கள் அனைவரும் அங்கிருந்து அகற்றப்பட்டனர். வேண்டுமென்ற அவர்கள் அகற்றப்படவில்லை. தற்போது வரை பேச்சுவார்த்தை நடந்து கொண்டு தான் இருக்கிறது. தூய்மை பணியாளர்கள் தங்களது போராட்டங்களை கைவிட்டு விட்டு வேலைக்கு திரும்ப வேண்டும். இது தான் என்னுடைய வேண்டுகோள். என்றார்.