இன்று சென்னை கமலாலயத்தில் கூடுகிறது தமிழக பா.ஜ.க. மையக்குழு..!
பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ.க. 23 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில் 19 தொகுதிகளில் பா.ஜ.க. வேட்பாளர்கள் நேரடியாக போட்டியிட்டனர். கூட்டணி கட்சிகளை சேர்ந்த 4 பேர் தாமரை சின்னத்தில போட்டியிட்டனர்.
ஆனால் தேர்தல் முடிவில் பா.ஜ.க. ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. இது பா.ஜ.க. தலைவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. கூட்டணி பலமின்மை, தேர்தலின்போது சில தொகுதிகளில் தேர்தல் செலவினத்தில் நடந்த முறைகேடுகள் போன்ற சில முக்கிய காரணங்களை தோல்விக்கான அடிப்படை காரணங்களாக கூறப்பட்டது.
இந்த நிலையில் தமிழக பா.ஜ.க. மையக்குழு கூட்டம் இன்று (புதன்) காலையில் கமலாலயத்தில் கூடுகிறது. கூட்டத்துக்கு மாநில தலைவர் அண்ணாமலை தலைமை வகிக்கிறார். மத்திய அமைச்சர் எல்.முருகன், பொன்.கேசவ விநாயகம், ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன், எச்.ராஜா, நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட மையக்குழு உறுப்பினர்கள் கலந்து கொள்கிறார்கள். இந்த கூட்டத்தில் கட்சியின் தோல்விக்கான காரணங்கள் பற்றியும், எதிர்கால திட்டங்கள் பற்றியும் விரிவாக ஆலோசிக்கப்படுகிறது.