தமிழகத்தில் 4 நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படுகிறது : இன்று சட்டப்பேரவையில் மசோதா தாக்கல்..!
நேற்று நடந்த சட்டப்பேரவை கூட்டத் தொடரில் கேள்வி நேரம் மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனி தீர்மானங்கள் ஆகியவற்றுக்கு பிறகு சட்ட மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்துவது தொடர்பான சட்ட மசோதாவை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என். நேரு தாக்கல் செய்தார்.
அப்போது புதுக்கோட்டை திருவண்ணாமலை நாமக்கல் மற்றும் காரைக்குடி ஆகிய நான்கு நகராட்சிகளையும் மாநகராட்சிகளாக தரம் உயர்த்துவதற்கு ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டிருந்த வருமான அளவுகள் மற்றும் மக்கள் தொகை தடையாக இருப்பது தெரிய வந்த நிலையில், அந்த வரையறைகளை தளர்த்தி குறிப்பிட்ட நகராட்சியின் மக்கள் தொகை மற்றும் ஆண்டு வருமானத்தை கணக்கிடாமல் இந்த நான்கு நகராட்சிகளையும் மாநகராட்சிகளாக தர உயர்த்துவதற்கான உள்ளாட்சி திருத்த சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
மேலும் எந்த ஒரு உள்ளாட்சி பகுதிகளையும் தேவைக்கேற்ப பேரூராட்சி மற்றும் நகராட்சி அல்லது மாநகராட்சியாக உருவாக்குவது குறித்து அறிவிக்கலாம் என திருத்தம் செய்யப்பட்டு இந்த சட்ட மசோதா நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று பிரிவு வாரியாக ஆய்வு செய்யப்பட்டு இந்த மசோதா நிறைவேற்றப்படவுள்ளது.
இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் திருவண்ணாமலை நகராட்சியில் மற்றும் 18 ஊராட்சிகள் அடி அண்ணாமலை பகுதிகள் ஆகியவை ஒன்றிணைத்து திருவண்ணாமலை மாநகராட்சியாகவும் புதுக்கோட்டை நகராட்சி மற்றும் 11 ஊராட்சிகளை ஒன்றிணைத்து புதுக்கோட்டை மாநகராட்சியாகவும், நாமக்கல் நகராட்சியுடன் மேலும் 12 ஊராட்சிகளை ஒன்றிணைத்து நாமக்கல் மாநகராட்சியாகவும் காரைக்குடி நகராட்சியுடன் 2 பேரூராட்சிகள், 5 ஊராட்சிகளை இணைத்து காரைக்குடி மாநகராட்சி என 4 புதிய மாநகராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளது.
மசோதா நிறைவேற்றப்பட்டு இந்த நான்கு நகராட்சிகளும் மாநகராட்சியாக மாற்றப்பட்டால் உள்ளாட்சி பகுதிகளின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளும் அப்பகுதி மக்களின் வாழ்க்கை தரமும் பொருளாதார வளர்ச்சியும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.