பிரபல தமிழ் சினிமா பிரபலம் வேலு பிரபாகரன் காலமானார்..!
இயக்குனர் வேலு பிரபாகரன் ஒளிப்பதிவாளராக தன் வாழ்க்கையை தொடங்கியவர். மேலும், இயக்குநர் மற்றும் நடிகர் என பல பரிமானங்களைக் கொண்டவர்.
இவர் கடந்த 1980-ம் ஆண்டு வெளிவந்த இவர்கள் வித்தியாசமானவர்கள் என்கிற படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமானார். இதையடுத்து 1989-ல் வெளிவந்த நாளைய மனிதன் படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்த வேலு பிரபாகரன், அப்படம் ஹிட்டானதை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தை அதிசய மனிதன் என்கிற பெயரில் கடந்த 1990-ம் ஆண்டு எடுத்தார். பின்னர் ஆர்.கே.செல்வமணி தயாரித்த அசுரன், ராஜாகிளி என இரண்டு படங்களை இயக்கினார் வேலு பிரபாகரன். இந்த இரண்டு படங்களுமே படுதோல்வியை சந்தித்தன.
பின்னர் அருண் பாண்டியனை வைத்து கடவுள், நெப்போலியன் நடித்த சிவன், சத்யராஜின் புரட்சிக்காரன் போன்ற படங்களை இயக்கிய வேலு பிரபாகரனுக்கு வெற்றி என்பது எட்டாக் கனியாகவே இருந்தது. இதனால் படம் இயக்குவதற்கு ரெஸ்ட் விட்டு, நடிப்பில் கவனம் செலுத்த தொடங்கினார். அந்த வகையில் பதினாறு, கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ், கடாவர், பீட்சா 3, ரெய்டு, வெப்பன், கஜானா போன்ற படங்களில் நடித்தார் வேலு பிரபாகரன்.
கடந்த சில நாள்களாக உடல் பாதிக்கப்பட்டிருந்த வேலு பிரபாகரன், சென்னையில் உள்ள தனியா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், வேலு பிரபாகரன் இன்று (ஜூலை 17) பிற்பகல் 12.20 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த நிலையில், அவர் உடல்நலக்குறைவால் மரணமடைந்துள்ள தகவல் திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
.png)