லட்சக்கணக்கான ரசிகர்கள் மத்தியில் திறந்தவெளி பஸ்ஸில் டி-20 உலகக்கோப்பையுடன் ஊர்வலம்..!
கடந்த ஜூன் 29-ம் தேதி பார்படாசில் நடைபெற்ற 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் பெற்றது. இந்நிலையில் அடுத்த இரண்டு நாட்கள் பார்படோசில் பெரில் புயல் தாக்கியதால் கடும் கனமழை கொட்டித் தீர்த்தது. சூறாவளிக் காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்ததால் அங்கு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. இதனால் இந்திய வீரர்கள் நாடு திரும்ப முடியாமல் போனது. இதையடுத்து இந்திய வீரர்கள் அங்குள்ள விடுதிகளில் பத்திரமாக தங்கவைக்கப்பட்டனர்.
ஏர் இந்தியா சிறப்பு விமானத்தின் மூலம் இந்திய வீரர்கள் நேற்று முன்தினம் (ஜூலை.3) தாயகம் புறப்பட்டனர். நேற்று காலை டெல்லி விமான நிலையத்திற்கு வந்த இந்திய வீரர்களுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மேள தாளங்கள் முழங்க இந்திய வீரர்களை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். விமான நிலையத்தில் வைக்கப்பட்டு இருந்த பிரம்மாண்ட கேக்கை இந்திய வீரர்கள் ரசிகர்களுடன் வெட்டிக் கொண்டாடினர்.
இதற்கிடையே வெற்றிக் கோப்பையுடன் இந்திய அணி வீரர்கள் நேற்று (ஜூலை.4) காலை பிரதமர் மோடியை சந்தித்தனர். 7 லோக் கல்யான் மார்க் பகுதியில் உள்ள பிரதமர் இல்லத்திற்கு விரைந்த இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய வீரர்கள், பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். தொடர்ந்து பிரதமர் மோடி இந்திய வீரர்களுடன் கலந்துரையாடினார்.
பிரதமர் மோடியுடனான சந்திப்பின் போது இந்திய வீரர்கள் பிரத்யேக ஜெர்சி அணிந்திருந்தனர். வழக்கமாக அணிந்து கொள்ளும் ஜெர்சிக்கு பதிலாக பெரிய எழுத்துக்களில் சாம்பியன் என்று பொறிக்கப்பட்டு இருந்த ஜெர்சியை அணிந்து கொண்டு வீரர்கள் பிரதமர் மோடியை சந்தித்தனர். தொடர்ந்து இந்திய வீரர்களுக்கு பிரதமர் மோடி விருந்தளித்தார். அவரும் இந்திய வீரர்களுடன் அமர்ந்து ஒன்றாக விருந்து உண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியுடனான சந்திப்புக்கு பின்னர் இந்திய வீரர்கள் மீண்டும் பேருந்து மூலம் நட்சத்திர விடுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இதனை தொடர்ந்து நேற்று மாலை மும்பையில் இந்திய வீரர்கள் பேரணியாக, திறந்த வெளி பஸ்ஸில் டி20 உலகக்கோப்பையுடன் வலம் வருவார்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து பேரணி நடைபெறும் இடத்தில் லட்சக்கணக்கான ரசிகர்கள் குவிந்துள்ளனர். மும்பையில் வெற்றிப்பேரணி நடைபெறும் மரைன் டிரைவ் பகுதியில் லட்சக்கணக்கான ரசிகர்கள் குவிந்தனர். இந்நிலையில் இந்த வெற்றிப்பயணத்தில் பங்கேற்க வீரர்கள் மும்பை வந்தடைந்தனர். இவர்களை கண்டதும் ரசிகர்கள் இந்தியா..இந்தியா.. என விண்ணை முட்டும் அளவுக்கு உற்சாகமாக கோஷம் எழுப்பினர். பிறகு திறந்த வெளி பஸ்சில் வீரர்கள் வெற்றி பயணம் சென்றனர். தொடர்ந்து இரவு 7 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் இந்திய அணி வீரர்களுக்கு பாராட்டு விழா கொண்டாட்டங்கள் நடைபெற்றன.
Though I was super happy, I did not cry after winning t20 cricket world cup this time. Today when I heard people in Wankhede stadium in Mumbai singing Vande Mataram, I could not control my tears of joy.
— Rudra P Banerjee (@rpb_memi) July 4, 2024
Thank You Indian Cricket Team for bringing this joy 🇮🇳💙 pic.twitter.com/PDEekCEgtV