வெற்றிமாறன் இயக்கத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் சூர்யா ?
வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக உள்ள அடுத்தப் படத்தில் நடிகர் சூர்யா இரட்டை வேடங்களில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக திரையுலகில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக உள்ளார் வெற்றிமாறன்.
பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசுரன் ஆகிய வெற்றிப்படங்களை கொடுத்தவர் இயக்குநர் வெற்றிமாறன். இதில், விசாரணையை தவிர்த்து மற்ற அனைத்து படங்களிலும் தனுஷ் தான் கதாநாயகன்.
வட சென்னை இரண்டாம் பாகம் பேசப்பட்டு வந்த நிலையில், சூர்யா உடன் இணைந்து அடுத்த படத்தை இயக்க உள்ளதாக வெற்றிமாறன் அறிவித்து இருந்தார்.
சி.சு.செல்லப்பா எழுதிய வாடிவாசல் நாவலை மையமாக வைத்து எடுக்கப்பட உள்ள அந்த படத்திற்கு வாடிவாசல் என்ற பெயரிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஜல்லிக்கட்டை மையமாக கொண்டு இந்த நாவல் எழுதப்பட்டுள்ளது.
கொரோனா காரணமாக பொதுமுடக்கம் அமலில் இருந்து வருவதால் படப்பிடிப்புகள் தொடங்கப்படாமல் இருந்து வருகிறது. பொதுமுடக்கம் முடிவுக்கு வந்த உடனே வாடிவாசல் படத்தின் படப்பிட்ப்புகள் தொடங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அத்துடன், படத்தில் தந்தை, மகன் என சூர்யா இரட்டை வேடங்களில் நடிக்கவுள்ளதாகவும் டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளது.
வாடிவாசல் கதையில் தந்தை கதாபாத்திரம் ஜல்லிக்கட்டின் போது இறந்துவிடுவார். பின்னர், அதே போன்ற ஜல்லிக்கட்டில் மகன் காளையை அடக்குவார்.
ஏற்கனவே வாரணம் ஆயிரம், 24 ஆகிய படங்களில் சூர்யா தந்தை மகன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள நிலையில், இந்தப் படத்திலும் தந்தை மகனாக நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், தந்தை கதாபாத்திரத்திற்கு ராஜ்கிரன், சத்யராஜ் ஆகியோரிடமும் பேச்சுவார்த்தை நடப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
newstm.in