நடிகர் சூர்யா 10 கோடி நன்கொடை..!

சூர்யாவை ஒரு பக்கா மாஸ் கமர்சியல் ஹீரோவாக மாற்றியது இயக்குனர் ஹரிதான். அவரின் இயக்கத்தில் சூர்யா நடித்த பெரும்பாலான படங்கள் வெற்றி பெற்றது. ஆனால், ஒரு கட்டத்தில் தன்னை ஏற்றிவிட்ட கவுதம் மேனன், பாலா, ஹரி போன்ற இயக்குனர்களையே கழட்டியும் விட்டார்.
சிறுத்தை சிவாவை நம்பி கங்குவா படத்தில் கடுமையான உழைப்பையும் போட்டார். ஆனால், படம் தேறவில்லை. படத்தின் திரைக்கதை சூர்யா ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. இதுதான் நேரம் என சூர்யாவை பிடிக்காதவர்கள் இந்த படத்தின் மீது வன்மத்தை கக்க படமோ தோல்வி அடைந்துவிட்டது.
அதன்பின் கார்த்திக் சுப்பாராஜின் இயக்கத்தில் சூர்யா நடித்த ரெட்ரோ படம் கடந்த 1ம் தேதி வெளியானது.
‘ரெட்ரோ’ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், ரூ.100 கோடிக்கும் அதிகமான வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தில் கிடைத்த லாபத்தில் ரூ.10 கோடியை தனது ‘அகரம்’ அறக்கட்டளைக்கு வழங்கியுள்ளார் சூர்யா.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “பகிர்தலே மிகச் சிறந்த மகிழ்ச்சி. நடிகனாக எனக்கு அடையாளம் கொடுத்து, என் முயற்சிகளை அங்கீகரித்து உயர்த்திய இந்த சமூகத்திடம், வெற்றியைப் பகிர்ந்து கொள்வது எப்போதும் மனநிறைவை தருகிறது.
‘ரெட்ரோ’ திரைப்படத்திற்கு நீங்கள் அளித்த பேராதரவு, மகிழ்ச்சியான வெற்றியைப் பரிசளித்து இருக்கிறது. கடினமான சூழல் வரும்போதெல்லாம் உங்கள் அன்பும், ஆதரவுமே என்னை மீண்டெழ துணை நிற்கிறது. அதற்காக பொதுமக்களுக்கும், அன்பான தம்பி தங்கைகளுக்கும் என் உளப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நீங்கள் எனக்கு அளித்திருக்கும் அடையாளத்தை, அர்த்தமுள்ளதாக, அழகானதாக மாற்றவே அகரம் ஃபவுண்டேஷன் தொடங்கப்பட்டது. அற உணர்வுள்ள தன்னார்வலர்கள், அரசுப் பள்ளி ஆசிரியர்கள், நன்கொடையாளர்கள், கல்லூரி நிறுவனங்கள் என அனைவரும் இணைந்த கூட்டு இயக்கமாக அகரம் செயல்பட்டு வருகிறது. அனைவரின் பங்களிப்போடு பல ஆயிரம் மாணவர்களின் வாழ்வில் கல்வி மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கி இருக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும், நம்பிக்கையோடு அகரம் ஃபவுண்டேஷனுக்கு விண்ணப்பிக்கிற பல ஆயிரக்கணக்கான மாணவர்களில், மிகக் குறைவானவர்களுக்கே உதவ முடிகிறது. அந்த எண்ணிக்கையை உயர்த்த வேண்டுமெனில், பங்களிப்பும் உயர வேண்டும். அதன் முதல் படியாக, ரெட்ரோ திரைப்படத்திற்கு நீங்கள் அளித்த பேராதரவின் மூலமாக கிடைத்த அன்பு தொகையில், பத்து கோடி ரூபாய்-ஐ இந்த கல்வியாண்டில் அகரம் ஃபவுண்டேஷனுக்கு, பகிர்ந்தளிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
விரைவில் தேர்வு முடிவுகள் வந்துவிடும். கடும் நெருக்கடிகளுக்கு மத்தியில், உயர்கல்வி கனவோடு படிக்கிற மாணவர்களை அன்பினால் அரவணைத்துக் கொள்வோம். ஒவ்வொருவரும் நம்மால் இயன்ற கல்வி உதவியை சுற்றி இருப்பவர்களுக்கு வழங்குவோம். கல்வியே ஆயுதம்.. கல்வியே கேடயம்” என தெரிவித்துள்ளார்.