செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை..!
சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை கைது நடவடிக்கைக்கு எதிராகவும், தனக்கு ஜாமின் வழங்க கோரியும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி அபய் எஸ். ஓஹா தலைமையிலான அமர்வில் நடைபெற்று வருகிறது. ஒன்றரை மாத கோடை விடுமுறைக்கு பிறகு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு விசாரணைக்காக நேற்று பட்டியலிடப்பட்டிருந்தது.
அப்போது அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, வழக்கின் விசாரணையை நாளைக்கு ஒத்திவைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
அப்போது செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும் அமலாக்கத்துறை தரப்பின் கோரிக்கையை ஏற்று வழக்கின் விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்த நீதிபதிகள் அன்றைய தினம் கடைசி வழக்காக செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீதான விசாரணை நடைபெறும் என்று அறிவித்தனர்.