1. Home
  2. தமிழ்நாடு

வாக்குச்சாவடி வாரியாக வாக்குகளின் எண்ணிக்கையை வெளியிடும்படி உத்தரவிட சுப்ரீம் கோர்ட் மறுப்பு..!

1

2019-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற மக்களவை தேர்தலின் வாக்குப்பதிவு விவரங்களில் முரண்பாடு இருப்பதாக கூறி ஏடிஆர், காமன் காஸ் ஆகிய தொண்டு அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன. இந்த வழக்கில் இடைக்கால மனு தாக்கல் செய்த இரு அமைப்புகளும், “தற்போது நடந்து வரும் மக்களவை தேர்தலில், வாக்குப்பதிவு சதவீதத்தை வெளியிட காலதாமதம் ஏற்படுகிறது. இதை தவிர்த்து, 48 மணி நேரத்துக்குள் இறுதி வாக்குப்பதிவு சதவீத விவரத்தை தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும். வாக்குப்பதிவு விவரம் அடங்கிய 17சி படிவத்தை பொதுவெளியில் வெளியிட வேண்டும்.” என்று கோரிக்கை விடுத்திருந்தது.

இந்த வழக்கு நேற்று (மே 24) சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தீபங்கர் தத்தா மற்றும் சதீஷ் சந்திர சர்மா ஆகியோர் அடங்கிய விடுமுறை கால அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, வாதிட்ட தேர்தல் ஆணைய தரப்பு வழக்கறிஞர், “இந்த வழக்கை விசாரிக்கக்கூடாது. ஏனென்றால், ஒவ்வொரு முறையும் இப்படியான சந்தேகங்களை தேர்தல் ஆணையத்தின் மீது எழுப்பும்போது, மக்களுக்கு தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பகத்தன்மை சிதைவதை பார்க்கிறோம்.

இந்த மக்களவை தேர்தலில்கூட வாக்கு சதவீதம் குறைவதற்கு இந்த மாதிரியான மனுக்கள் மிக முக்கிய காரணமாக அமைகின்றன. இந்த மாதிரியான மனுக்கள் பொதுமக்கள் மத்தியில் தேர்தல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு பதில் குழப்பத்தை ஏற்படுத்துகின்றன. அதனால் மக்கள் வாக்குசாவடிகளுக்கு வருவதற்கு தயங்குகிறார்கள்.” என்று குற்றச்சாட்டை முன்வைத்தனர்.

மனுதாரர் சார்பில் இதற்கு கடுமையான ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. அப்போது, “சந்தேகங்களை தீர்ப்பதற்கே நீதிமன்றத்தை நாடியுள்ளோம். நேரடியாக தேர்தல் ஆணையத்துக்கு செல்லாததற்கு காரணமும் அதுதான். தேர்தல் ஆணையம் எங்கள் சந்தேகங்களை இப்படி கொச்சைப்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது” என்று மனுதாரரின் வழக்கறிஞர் வாதிட்டார் .

இதை அடுத்து நீதிபதிகள் தெரிவிக்கையில், “ஏற்கெனவே, ஐந்து கட்ட வாக்குப் பதிவு முடிந்துவிட்டது. 6-ம் கட்ட தேர்தல் இன்று நடைபெற உள்ளது. இந்த நேரத்தில் இந்த வழக்கில் உத்தரவு பிறப்பிப்பது சரியாக இருக்காது. அதனால், தேர்தல் முடிந்தபின் இந்த வழக்கு விசாரணை செய்யப்படும். கோடை விடுமுறை முடிந்தபின் இந்த வழக்கு விசாரணைக்கு பட்டியலிடப்படும். அதுவரை எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க முடியாது” என்று கூறிய நீதிபதிகள் தீபங்கர் தத்தா மற்றும் சதீஷ் சந்திர சர்மா ஆகியோர் அடங்கிய விடுமுறை கால சுப்ரீம் கோர்ட் அமர்வு, இந்த மனுவை நிராகரித்தது.

Trending News

Latest News

You May Like