1. Home
  2. தமிழ்நாடு

கவர்னர் ஆர்.என்.ரவிக்கு சுப்ரீம் கோர்ட் சரமாரி கேள்வி..!

1

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பிவைக்கப்பட்ட மசோதாக்களுக்கும், அரசாணைகளுக்கும், அரசின் கோப்புகளுக்கும் உரிய ஒப்புதல் அளிக்க கவர்னருக்கு உத்தரவிடக்கோரி தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் முக்கியமாக, மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்க கால வரம்பு நிர்ணயம் செய்ய உத்தரவிட வேண்டும்' என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த வழக்கை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு கடந்த 10-ம் தேதி விசாரித்தது. அப்போது தமிழ்நாடு அரசின் சார்பில் மூத்த வக்கீல்கள் அபிஷேக் மனு சிங்வி, முகுல் ரோத்தகி, பி.வில்சன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். வாதத்தை பதிவு செய்து கொண்ட சுப்ரீம் கோர்ட், இந்த விவகாரம் மிகவும் கவலை அளிக்கக்கூடியதாக இருப்பதாக தெரிவித்ததுடன், ரிட் மனுவுக்கு பதில் அளிக்க மத்திய அரசின் உள்துறை செயலாளருக்கு உத்தரவிட்டு, விசாரணையை நவம்பர் 20-ம் தேதிக்கு (நேற்று) தள்ளி வைத்தது.

இதற்கிடையே கடந்த 13-ந்தேதி கவர்னர் ஆர்.என்.ரவி, தன்னிடம் நீண்ட காலமாக கிடப்பில் இருந்த 10 சட்ட மசோதாக்களையும் தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பினார். அதனைத்தொடர்ந்து, கடன்த வெள்ளிக்கிழமை கூட்டப்பட்ட தமிழக சட்டசபையின் சிறப்பு கூட்டத்தில், மீண்டும் அந்த 10 சட்ட மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டு, அன்று மாலையே கவர்னர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கிடையே சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தொடர்ந்துள்ள வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. முன்னதாக கவர்னர் ஆர்.என்.ரவி திடீரென டெல்லி புறப்பட்டு சென்றார். 

இந்தநிலையில்,சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி அமர்வு முன்பு நேற்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் முகுல் ரோத்தகி மற்றும் வில்சன் ஆகியோர் ஆஜராகினர். அப்போது, எந்த காரணமுமின்றி மசோதாக்களை கவர்னர் நிராகரித்துள்ளார். ஒவ்வொரு முறையும் கவர்னருக்கு எதிராக சுப்ரீம் கோர்ட் வந்துகொண்டிருக்க முடியாது. மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் வழங்காததால் ஒட்டுமொத்த தமிழ்நாடு மக்களும் பாதிக்கப்படுகின்றனர். கடந்த 2020ம் ஆண்டு முதல் 13க்கும் மேற்பட்ட மசோதாக்களுக்கு தமிழ்நாடு கவர்னர் ஒப்புதல் வழங்காமல் கால தாமதம் செய்கிறார் என்று தமிழக அரசு தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து பேசிய தலைமை நீதிபதி, சுப்ரீம் கோர்ட் நவ.10-ம் தேதி கவர்னர் தரப்பு பதிலளிக்க பிறப்பித்த பிறகு மசோதாக்களை திருப்பி அனுப்பியது ஏன்? மசோதாக்களை கவர்னர் திருப்பி அனுப்பியது தொடர்பான ஆவணங்கள் எங்கு உள்ளன? 3 ஆண்டுகளாக கவர்னர் என்ன செய்து கொண்டிருந்தார்? என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார். மேலும், நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு கவர்னர் எப்போது ஒப்புதல் அளிப்பார் என்றும், கவர்னர் அடுத்த கட்டமாக என்ன செய்யப் போகிறார் என்பதை அறிய காத்திருப்பதாகவும் தலைமை நீதிபதி தெரிவித்தார்.

மசோதாக்களுக்கு மறைமுகமாக ஒப்புதல் பெற இது போன்ற ரிட் மனுக்களை தாக்கல் செய்ய அனுமதிக்க கூடாது என மத்திய அரசு தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. மசோதாக்கள் மீது பரிசீலனைகள் செய்ய வேண்டியுள்ளதால் அவகாசம் தேவை என்று கவர்னர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், வழக்கின் விசாரணையை வரும் டிசம்பர் 1-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Trending News

Latest News

You May Like