'நீட்' முடிவை நாளை பிற்பகல் 12 மணிக்குள் வெளியிட என்.டி.ஏ.வுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக தேர்வை ரத்து செய்யக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மாணவர்கள் சிலர் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த குற்றச்சாட்டை விசாரித்து வரும் சி.பி.ஐ. மற்றும் நீட் தேர்வு நடத்திய தேசிய தேர்வு முகமையை பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது. அதன்படி, தேசிய தேர்வு முகமை கடந்த வாரம் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது.
இந்த நிலையில், நேற்று காலை நீட் தேர்வு முறைகேடு வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, லட்சக்கணக்கான மாணவர்கள் இந்த வழக்கை எதிர்நோக்கி காத்துள்ளதால் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்தார். தொடர்ந்து, இந்த வழக்கில் தேசிய தேர்வு முகமை ஏற்கெனவே பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ள நிலையில், சி.பி.ஐ. தரப்பிலும் பதிலளிக்கப்பட்டுள்ளது.
இந்த வினாத்தாள் கசிவால் இளநிலை நீட் தேர்வு தனது புனிதத்தை முற்றிலும் இழந்தால் மட்டுமே, அதாவது ஒட்டுமொத்த தேர்வு முறையும் பாதிக்கப்பட்டுள்ளதாக மனுதாரர் தரப்பில் நிரூபித்தால் மட்டுமே தேர்வை ரத்து செய்ய முடியும் என்று தலைமை நீதிபதி தெரிவித்தார். மேலும், குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாமல் அனைத்து மாணவர்களுக்கும் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, வாதத்தை முன்வைத்தர் மனுதாரர தரப்பு வழக்கறிஞர், நீட் தேர்வு எழுதிய 23 லட்சம் மாணவர்களுக்கும் மறுதேர்வு நடத்த வலியுறுத்தவில்லை, நீட் தேர்வில் தேர்வான 1.08 லட்சம் மாணவர்களுக்கு மட்டும் மறுதேர்வு நடத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும், நீட் தேர்வு முறைகேடு குறித்து சென்னை ஐஐடி சமர்பித்த அறிக்கை ஒருதலைபட்சமானது என்று மனுதாரரின் வாதத்துக்கு மத்திய அரசு தரப்பில் மறுப்பு தெரிவித்தது.
இதையடுத்து (நாளை) ஜூலை 20-ம் தேதி பகல் 12 மணிக்குள் நீட் தேர்வு முடிவுகளை தேர்வு மைய நகரங்கள் மற்றும் தேர்வு மையங்கள் வாரியாக வெளியிட வேண்டும் என்று தேசிய தேர்வு முகமைக்கு உத்தரவிட்டுள்ளது. தேர்வு முடிவுகள் முழுமையாகத் தெரியாததால் மாணவர்கள் சிரமப்படுகிறார்கள். தேர்வு நடைபெற்ற நகரம் மற்றும் தேர்வு மையங்கள் வாரியாக தேர்வு முடிவுகள் எவ்வாறு மாறுபடுகின்றன என்பதை நாங்கள் தெரிந்து கொள்ள முடியும். தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும் என்ற உத்தரவை மாற்றக் கோரிய மத்திய அரசின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. தேர்வு மையங்கள் வாரியாக மதிப்பெண் விவரங்கள் மட்டும் வெளியிடப்பட வேண்டும், மாணவர்களின் அடையாளம் வெளியிடப்படக் கூடாது என்றும் சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
.png)