சூப்பர் அறிவிப்பு! வணிகர்கள் இனி 24 மணி நேரமும் கடையை திறக்கலாம்..!

அதிமுக ஆட்சிக்காலத்தில் தமிழகத்தில் உள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களை 24 மணி நேரமும் திறந்து கொள்ளலாம் என 2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம் அனுமதி அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஆறு மாதம் இந்த உத்தரவு அமலில் இருந்த நிலையில் கொரோனா தொற்று காரணமாக கடைகள் திறக்கும் நேரம் குறைக்கப்பட்டது.
இந்த நிலையில் மீண்டும் கடைகளை 24 மணி நேரமும் திறக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு வணிகர் சங்கத்தினர் வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற வணிகர் சங்க மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் மீண்டும் கடைகளை 24 மணி நேரமும் திறக்க அனுமதி அளக்கப்படும் எனக் கூறியிருந்தார்.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் அனைத்து விதமான கடைகளையும் 24 மணி நேரமும் திறந்து கொள்வதற்காக அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அதிகாரப்பூர்வமாக அரசாணை வெளியிட்டு இருக்கிறது தமிழக அரசு. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்," தமிழ்நாடு முதலமைச்சர் 05.05.2025 அன்று 42வது வணிகர் தினத்தையொட்டி, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் மதுராந்தகத்தில் நடைபெற்ற மாநாட்டில், "பொதுமக்களின் நலன் கருதி கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் அனைத்து நாட்களும் 24 மணி நேரமும் திறந்திருக்க அனுமதி அளித்து வழங்கப்பட்ட அரசாணை, வரும் ஜுன் 4-ம் தேதியுடன் முடிவடைவதால் இதனை மேலும், 3 ஆண்டுகளுக்கு நீட்டித்து அரசாணை வெளியிடப்படும்" என அறிவித்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பிற்கிணங்க, பொதுமக்களின் நலன் கருதி, 10 அல்லது அதற்கு மேற்பட்ட பணியாளர்களை பணியமர்த்தியுள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள், வாரத்தின் 7 நாட்களும் 24 மணி நேரமும் இயங்கும் வகையில் அனுமதி அளிக்கப்பட்டு, 05.06.2025 முதல் மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டித்து, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையால், அரசாணை (டி) எண்.207. தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் (கே2) வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் வணிகர்களும், பொதுமக்களும் பயனடைவார்கள்" என கூறப்பட்டுள்ளது.