ரூ.1,000 கோடி வரி ஏய்ப்பு செய்த சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ்..!!

சென்னை திநகர், புரசைவாக்கம், குரோம்பேட்டை, போரூர் உள்ளிட்ட 37- க்கும் மேற்பட்ட இடங்களில் சூப்பர் சரவணா, சரவணா செல்வரத்தினம் உள்ளிட்ட கடைகள் உள்ளன. இந்த கடைகளில் கடந்த 1-ம் தேதி முதல் வருமான வரித் துறை சோதனை நடத்தப்பட்டது.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனம் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வருவாயையும், 150 கோடி ரூபாய் மதிப்பில் பொருட்களை வாங்கியது தொடர்பான கணக்கையும் மறைத்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல், சரவணா செல்வரத்தினம் நிறுவனம், போலி ரசீதுகளை உருவாக்கி 80 கோடி ரூபாய் வருவாயை கணக்கில் காட்டவில்லை என்றும், தங்களுக்கு சொந்தமான இடங்களை வாடகைக்கு விட்டது, தங்கம் உள்ளிட்டவை வாங்கி விற்றது தொடர்பான கைப்பற்றப்பட்ட ரசீதுகள் மூலமாக 7 கோடி ரூபாய் அளவிற்கு கணக்கு மறைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த இரு குழுமங்கள் தொடர்புடைய இடங்களில் 10 கோடி ரூபாய் கணக்கில் வராத ரொக்கமும், 6 கோடி மதிப்பிலான நகைகளும் பறிமுதல் செய்து இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.