இனி டாஸ்மாக் காலை 7 மணிக்கே திறக்க ஆலோசனை ?

தமிழகத்தில் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, செயல்பாட்டில் இருந்த 5,329 கடைகளில் 500 கடைகள் கடந்த ஜூன் 22-ம் தேதி மூடப்பட்டன.
இந்நிலையில், 90 மிலி ‘டெட்ராபேக்’ திட்டத்தை செயல்படுத்துவது, டாஸ்மாக் நேரத்தை மாற்றியமைப்பது தொடர்பான கோரிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் முத்துசாமி நேற்று ஆலோசனை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது: டாஸ்மாக் கடைகள் பாதுகாப்பாக செயல்பட வேண்டும். விற்பனை தொகையை வங்கியே நேரடியாகச் சென்று வாங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் பணியாளர்பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.கடைகளில் எந்த ஒரு தவறு நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். மிகச் சில கடைகளில்தான் புகார்கள் வந்துள்ளன. அவற்றையும் ஒழுங்குபடுத்தியுள்ளோம்.
காலி மது பாட்டில்கள் விவசாயிகளுக்கு மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது. எனவே கையாளுவதற்கு சுலபமாக இருப்பதாலும், இழப்பீடு தவிர்க்கப்படும் என்பதாலும் ‘டெட்ரா பேக்’ வரவேண்டும் என்று அதிகாரிகள், டாஸ்மாக் பணியாளர்கள், பொதுமக்கள் எண்ணுகின்றனர். எனவே, அதற்கான நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
தற்போது மதியம் 12 மணி முதல் இரவு 10 மணிவரை டாஸ்மாக் கடைகள் செயல்படுகின்றன. எப்எல் 2 என்பது காலை 11 மணி முதல்இரவு 11 மணி வரை செயல்படுகிறது. ஆனால், காலை 7 மணிமுதல் 9 மணிக்குள் கட்டிடப்பணி உள்ளிட்ட கடுமையான பணிகளுக்கு செய்பவர்களில் சிலர், சிலசிரமங்களுக்கு ஆளாகின்றனர். அதைப் பற்றியும் ஆலோசித்து வருகிறோம்.