1. Home
  2. தமிழ்நாடு

ரயில் நிலைய கொள்ளையில் திடீர் திருப்பம்.. கணவன் - மனைவி செய்த காரியம் அம்பலம்..!

ரயில் நிலைய கொள்ளையில் திடீர் திருப்பம்.. கணவன் - மனைவி செய்த காரியம் அம்பலம்..!


திருவான்மியூர் ரயில் நிலைய கொள்ளையில் ரயில்வே ஊழியரே திட்டமிட்டு ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை திருவான்மியூர் ரயில் நிலைய டிக்கெட் கவுண்டரில் பணிபுரிந்து வரும் டீக்காராம் மீனா என்பவரை துப்பாக்கி முனையில் மிரட்டி கட்டிப்போட்டுவிட்டு, 1.32 லட்சம் ரூபாயை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றதாக ரயில்வே போலீசாரிடம் டீக்காராம் மீனா புகார் அளித்தார்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்களை பிடிக்க எஸ்பி அதிவீரபாண்டியன் தலைமையில் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டது. ரயில் நிலையத்தில் சிசிடிவி இல்லாத நிலையில் ரயில் நிலையத்தின் அருகே இருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

அதில் டீக்காராமின் மனைவி ரயில் நிலையத்துக்குள் செல்வது தெரியவந்தது. இதனால் டீக்காராம் மீது சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். விசாரணையில் திக்குமுக்காடிய அவர் உண்மையை ஒப்புக் கொண்டுள்ளார்.

தன்னுடைய மனைவியை வரவழைத்து டிக்கெட் கவுண்டரில் உள்ள பணத்தை டீக்காராமே எடுத்துக் கொடுத்து நாடகத்தை அரங்கேற்றியுள்ளார். விசாரணைக்கு பின் ரயில்வே ஊழியர் டீக்காராமை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில் கொள்ளை தொடர்பாக போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொள்ளையில் டீக்காராம் மற்றும் அவரது மனைவியை தவிர வேறு யாரேனும் ஈடுபட்டார்களா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Trending News

Latest News

You May Like