1. Home
  2. தமிழ்நாடு

அம்மா நகைகளை அடகு வைத்து படித்தவர் இன்று தஞ்சாவூர் கலெக்டர்..!

1

ஒவ்வொரு யுபிஎஸ்சி சாதனையாளர்கள் பின்னும் ஒவ்வொரு கதை இருக்கிறது. அதிலும் குறிப்பாக பெண் கல்வியை பொறுத்தவரை கூடுதலாகவே தடங்கல் உள்ளன. பல்வேறு தடங்கல்களை தாண்டி வெற்றி பெற்று, இன்று தஞ்சாவூர் மாவட்ட கலெக்ட்ராக உள்ளவர் பிரியங்கா பங்கஜம். அவரின் அம்மா நகைகளை அடகு வைத்துதான் அவரை படிக்க வைத்தார் என அவர் சமீபத்தில் பேசிய வீடியோ வைரலானது.

 

திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள ஆலங்கால் கிராமத்தை சேர்ந்தவர் பிரியங்கா பங்கஜம். 1984-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 22-ம் தேதி பிறந்தவர். கிராமத்தில் பிறந்தவர்கள் ஐஏஎஸ் ஆக முடியுமா என சித்திக்கும் காலக்கட்டம் அது. ஐஏஎஸ் ஆக வேண்டும் என்ற கனவுடன் யுபிஎஸ்சி தேர்விற்கு படித்தார்.

 

தமிழ்நாட்டில் தலைசிறந்த கல்வி நிறுவனமான அண்ணா பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் பாடத்தில் பொறியியல் படிப்பை முடித்தவர் பிரியங்கா பங்கஜம். அதுவும் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றார். முதலில் அண்ணா பல்கலைக்கழகத்தில் இடம் கிடைக்கவே அவர் அதிக கட்-ஆஃப் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். படிப்பில் சிறந்து விளங்கிய அவர், மற்றோரு முதன்மை கல்வி நிறுவனமான பெங்களூரு-வில் உள்ள IIM எம்பிஏ படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார்.

முதலில் ஐஆர்எஸ் தேர்வில் வெற்றி பெற்று, அரசு பணியில் சேர்ந்த அவர், ஐஏஎஸ் ஆக வேண்டும் என்ற கனவுடன், அரசு பணியில் இருக்கும்போது, மீண்டும் யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வை எழுதினார். 2015-ம் ஆண்டு யுபிஎஸ்சி தேர்வில் அகில இந்திய அளவில் 133வது இடம் பெற்று ஐஏஎஸ் கனவை நினைவாக்கினார்.

பிரியங்கா அவர்கள் படிப்பில் சிறந்த விளங்கினார். அவரை படிக்க வைக்க நிதி சிக்கல் இருப்பினும், அவரின் அம்மா நகைகளை அடகு வைத்து அவரை படிக்க வைத்துள்ளார். சமூகத்தில் பெண்களுக்கு நகை சேர்ப்பது, பெரிய படிப்புகளை படிக்க வைப்பதை காட்டியிலும் திருமணம் செய்துகொடுப்பது உள்ளிட்டவை சாதாரணமாக பார்க்கப்படும் நிலையில், தன்னுடைய மகள் படிக்க வேண்டும் என தன்னுடைய நகைகளை அடங்கு வைத்து படிக்க வைத்துள்ளார்.

தனது அம்மாவின் தியாகம், ஊக்குவிப்பு ஆகியவற்றுக்கு நன்றி கடன் செலுத்துவதற்கும், அவருக்கு பெருமை சேர்க்க வேண்டும் என யுபிஎஸ்சி தேர்ச்சி பெற்ற பின்னர், பிரியங்கா என்ற பெயருக்கு பின், பிரியங்கா பங்கஜம் என அவரின் அம்மாவின் பெயரை சேர்த்து கொண்டார்.

சிறிய வயதில் என்னவாக வேண்டும் என திட்டம் எதுவும் அவருக்கு இருந்தது இல்லை என கூறிய அவர், அவரின் ”அம்மாவை சந்தோஷமாக வைத்துகொள்ள வேண்டும். அவங்க பொண்ணு நான் என்று எல்லாரும் சொல்வதை அவர்கள் கேட்கனும் என்று நினைத்தேன்”. அதுவே ஐஏஎஸ் ஆக அவரை தூண்டியதாக கூறியுள்ளார்.

2017-ம் ஆண்டில் தகவல் தொடர்பியல் துறையில் உதவி செயலாளராக பணியாற்றியுள்ளார். தொடர்ந்து, மயிலாடுதுறை, திருப்பத்தூர் மாவட்டங்களில் சார் ஆட்சியராகவும், மதுரை ஊரக வளர்ச்சியில் கூடுதல் ஆட்சியராகவும் பணியாற்றியுள்ளார். தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு ஆணையத்தில் செயல் இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். 2024-ம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்டத்திற்கு ஆட்சியராக நியமிக்கப்பட்டார். விவசாயம் பூமியான தஞ்சாவூரில் பிரியங்கா பங்கஜம் ஐஏஎஸ் , சிறப்பாக செயல்பட்டு வருகிறார். பள்ளி மாணவர்களுக்கான கல்வி, விவசாயிகளின் நலன், மக்களை சந்திப்பது என அனைவராலும் அறியப்படும் கலெக்ட்ராக செயல்படுகிறார். தஞ்சாவூர் மாவட்டத்தின் இரண்டாம் பெண் கலெக்டர் என்ற பெருமையும் பெற்றுள்ளார்.

Trending News

Latest News

You May Like