மயக்க ஊசி போட்டு உயிரை விட்ட மாணவர்..!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் என்பவருடைய மகன் சந்தான கோபாலன். இவருக்கு 22 வயது ஆகிறது. நாமக்கல் அருகே உள்ள பி.ஜி.பி. பார்மசி கல்லூரியில் ‘டாக்டர் என் பார்மசி’ என்ற 5 ஆண்டு மருத்துவ படிப்பைப் படித்து வந்திருக்கிறார்.
கல்லூரியில் 4 ஆண்டுகள் படிப்பை முடித்துவிட்டார் சந்தான கோபாலன். மாணவர் சந்தான கோபாலன், நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த இரண்டரை மாதங்களாக ‘ஹவுஸ் சர்ஜன்’ பயிற்சி மேற்கொண்டு வந்தார்.
மாணவர் சந்தான கோபாலன் நேற்று வழக்கம்போல் பயிற்சிக்கு வந்தார். உள்நோயாளி பெண்கள் பிரிவில் உள்ள டாக்டர்கள் கழிவறைக்கு சென்ற மாணவர் சந்தான கோபாலன். நீண்ட நேரம் ஆகியும் வெளியே வரவே இல்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது நண்பர்கள் கழிவறைக்கு சென்று கதவைத் தட்டி உள்ளனர். இருப்பினும் எவ்வித சத்தமும் வரவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள், சக மருத்துவமனை ஊழியர்களுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்து உள்ளனர். அப்போது சந்தான கோபாலன் மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை மீட்டு சிகிச்சைக்கு அனுப்பினார்கள். இருப்பினும் சிகிச்சை பலனின்றி மாணவர் சந்தான கோபாலன் உயிரிழந்தார். இதுகுறித்து நல்லிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அவர்கள் உடனடியாகக் கழிவறைக்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது அங்கு ஊசி, மயக்க மருந்து பாட்டில் மற்றும் சிரஞ்சு ஆகியவை கிடந்தது. இதைப் பார்க்கும்போது கல்லூரி மாணவர் சந்தான கோபாலன் அறுவை சிகிச்சைக்குப் பயன்படுத்தும் மயக்க மருந்தைத் தனக்கு தானே உடலில் ஊசிமூலம் ஏற்றி, உயிரைவிட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
தனியார் பார்மசி கல்லூரியில் அவர் திடீரென ஏன் அப்படி நடந்து கொண்டார் என்பது குறித்து தெரியவில்லை. உறவினர்கள், நண்பர்களுக்கும் தெளிவாகத் தெரியவில்லை. இதையடுத்து நல்லிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மாணவர் மயக்க ஊசி போட்டு உயிரை விட்ட சம்பவம் நாமக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.