கூடுதலாக கட்டணம் வசூலித்தால் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்..!

தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் நேற்று பெரம்பலூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது., சென்னையில் இருந்து சொந்த ஊர் திரும்புவதற்கும் மற்றும் ஏனைய பகுதிகளுக்கு சொந்த ஊர்களுக்கு திரும்புவதற்கும் கூடுதல் சிறப்பு பேருந்து இயக்கப்பட உள்ளது. சென்னையில் இருந்து 16 ஆயிரம் அரசு பேருந்துகள் இயக்கப்படுகிறது. கும்பகோணம் மற்றும் இதர கோட்ட அரசு போக்குவரத்து கழகம் மூலம் பல்வேறு பகுதிகளில் பணியாற்றுபவர்கள் சொந்த ஊர் திரும்புவதற்காக வரும் 9-ந்தேதி முதல் இயக்கப்பட உள்ளது.
பொதுமக்கள் அனைவரும் அரசு பேருந்துகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஆம்னி பேருந்து உரிமையாளர்களை அழைத்து கட்டணம் நிர்ணயம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதன் பேரில் தீபாவளியை முன்னிட்டு ஆம்னி பேருந்து நிர்ணயித்த கட்டணங்களில் இருந்து 30 சதவீதம் குறைப்பு செய்து இயக்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதனை மீறி கூடுதலாக கட்டணம் வசூலித்தால் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார். பேட்டியின் போது பிரபாகரன் எம்.எல்.ஏ. உடன் இருந்தார்.