1. Home
  2. தமிழ்நாடு

10,150 சிறப்பு பேருந்துகளை இயக்க அரசு போக்குவரத்துத் துறை ஏற்பாடு..!

1

 அரசு போக்குவரத்துத் துறை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வரும் 17, 18-ம் தேதிகளில், சென்னையிலிருந்து வெளியூர்களுக்கு நாள்தோறும் இயக்கக்கூடிய 2,092 பேருந்துகளுடன், கூடுதலாக 2,970 சிறப்புப் பேருந்துகளும், பிற ஊர்களிலிருந்து கூடுதலாக 3,060 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. தேர்தல் முடிந்த பிறகு பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு 20, 21-ம் தேதிகளில் தினசரி இயக்கக்கூடிய 2,092 பேருந்துகளுடன் கூடுதலாக 1,825 சிறப்புப் பேருந்துகளும், பிற முக்கிய ஊர்களிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு 2,295 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. அதன்படி, 4 நாள்களுக்கும் சேர்த்து 10,150 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

சென்னையைப் பொறுத்தவரை விழா காலங்களைபோல தற்காலிக நிலையங்கள் மூலம் பேருந்துகள் இயக்கப்படும். அதன்படி, திருச்சி, கரூர், மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், மார்த்தாண்டம், திருவனந்தபுரம், காரைக்குடி, புதுக்கோட்டை, திண்டுக்கல், திருப்பூர், பொள்ளாச்சி, ராமேசுவரம், சேலம், கோயம்புத்தூர், எர்ணாகுளம், திண்டிவனம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர், விருத்தாச்சலம், அரியலூர், திட்டக்குடி, ஜெயங்கொண்டம், போளூர், வந்தவாசி மற்றும் திண்டிவனம் வழியாக திருவண்ணாமலை, புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் மற்றும் திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் செல்லும் விரைவு பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து வழக்கம்போல் இயக்கப்படும்.

திண்டிவனம், விக்கிரவாண்டி, பண்ருட்டி வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் அனைத்து பேருந்துகளும் தாம்பரம் மெப்ஸ் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும். தாம்பரத்திலிருந்து ஒரகடம் வழியாக காஞ்சிபுரம், வேலூர் மற்றும் ஆரணி செல்லும் பேருந்துகள் தாம்பரம் வள்ளுவர் குருகுல பேருந்து நிறுத்தத்தில் இருந்து புறப்படும். கிழக்கு கடற்கரை சாலை வழியாக (எஸ்இடிசி உட்பட) மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, புதுச்சேரி, கடலூர் சிதம்பரம் வரை செல்லும் பேருந்துகள் மற்றும் பூந்தமல்லி வழியாக காஞ்சிபுரம், செய்யாறு, ஆற்காடு, ஆரணி, வேலூர், திருப்பத்தூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர் மற்றும் பெங்களூரு போன்ற ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் வழக்கம்போல் கோயம்பேட்டில் இருந்து இயக்கப்படும்.

பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை மற்றும் செங்குன்றம் வழியாக ஆந்திர மாநிலத்துக்குச் செல்லும் பேருந்துகள் திருச்சி,சேலம், கும்பகோணம், திருவண்ணாமலை பேருந்துகள் மாதவரத்தில் இருந்து இயக்கப்படும். இந்த பேருந்து நிலையங்களுக்குச் செல்ல கோயம்பேட்டில் இருந்து 24 மணி நேரமும் மாநகர பேருந்துகள் இயக்கப்படும்.

முன்பதிவுக்கு tnstc செயலி மற்றும் www.tnstc.in இணையதளத்தை பயன்படுத்தலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like