நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் வைத்த முக்கிய கோரிக்கைகள்..!
நடப்பு நிதியாண்டுக்கான நிதி ஆயோக் கூட்டம் பிரதமர் தலைமையில் இன்று டெல்லியில் தொடங்கியுள்ளது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த முதல்வர்களுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்த நிலையில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார். கடந்த 3 ஆண்டுகளாக நிதி ஆயோக் கூட்டங்களில் அவர் கலந்து கொள்ளாத நிலையில், தற்போது அவர் பங்கேற்றுள்ளார்.
முன்னதாக, நேற்று விமானம் மூலம் டெல்லி சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மற்றும் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியை நேரில் சந்தித்து பேசினார். அதைத் தொடர்ந்து இரவு தமிழ்நாடு இல்லத்தில் தங்கியிருந்த அவர், இன்று காலை 11 மணி அளவில் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்ள தமிழக அரசு அதிகாரிகளுடன் சென்றார்.
இந்த நிலையில், நிதி ஆயோக் கூட்டத்தை கர்நாடக முதல்வர் சித்தராமையா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் புறக்கணித்துள்ளனர். தனிப்பட்ட காரணங்களுக்காக கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நிதி ஆயோக் கூட்டத்தில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கோரிக்கை.
1.கடந்த 15-ஆவது நிதிக்குழுவின் பரிந்துரைகளின்படி மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்ககூடிய வரி வருவாய்ப் பங்கினை 41 விழுக்காடாக உயர்த்தினார்கள். ஆனால் 33.16 விழுக்காடு மட்டுமே மாநிலங்களுக்குப் பகிர்ந்து அளிக்கப்பட்டிருக்கிறது.
ஒன்றிய அரசு அறிமுகப்படுத்தும் திட்டங்களுக்கு மாநில அரசு செலவிடும் அதிக நிதி பெரும் சுமையை ஏற்படுத்துகிறது. ஒன்றிய வருவாயில் மாநிலங்களுக்கான பங்கு 50 விழுக்காடு உயர்த்தப்படுவதுதான் முறையானதாக இருக்கும்.
2. P.M.SHRI' திட்டம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், சில மாநிலங்கள் கையெழுத்து போடாததால், S.S.A. நிதி மறுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, 2024-2025-ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 2,200 கோடி ரூபாய் நிதி தமிழ்நாட்டுக்கு மறுக்கப்பட்டுள்ளது.
தாமதமின்றி, ஒருதலைப்பட்ச நிபந்தனைகளை வலியுறுத்தாமல் இந்த நிதியை விடுவிக்க வேண்டும்.
3. தமிழ்நாட்டில் உள்ள காவிரி, வைகை, தாமிரபரணி உள்ளிட்ட முக்கியமான ஆறுகளையும், நாட்டிலுள்ள பிற முக்கியமான ஆறுகளையும் சுத்தம் செய்து மீட்டெடுக்கத் திட்டம் தேவை. எனவே, காவிரி, வைகை, தாமிரபரணிக்கு புதிய திட்டத்தை உருவாக்கித் தர வேண்டும்.
இந்தத் திட்டங்களுக்கு எல்லாம், ஆங்கிலத்தில் பெயரிட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். அவற்றை மாநிலங்கள் தங்களது மொழியில் மொழிபெயர்த்துக் கொள்வார்கள்.
4. நாட்டிலுள்ள நகர்ப்புறங்களின் மேம்பாட்டிற்கு பெருமளவிலான நிதியைக் கொண்ட ஒரு பெரிய திட்டம் அவசியம்.
சிறந்த உட்கட்டமைப்பு, இயக்கம் மற்றும் சுகாதாரத்தை மையமாகக் கொண்ட ஒரு புதிய நகர்ப்புற மறுமலர்ச்சித் திட்டத்தை உருவாக்குவது அவசரத் தேவை. இதுபோன்ற ஒரு திட்டத்தை விரைவில் நீங்கள் உருவாக்கிட வேண்டும்.