1. Home
  2. தமிழ்நாடு

இன்று முதல்வர் பிறந்தநாள் : உடன்பிறப்புகளுக்கு வேண்டுகோள் வைத்த ஸ்டாலின்..!

1

தமிழக முதல்வர் ஸ்டாலின், "பொதுவாக நான் பிறந்தநாளை பெரிய அளவில் ஆடம்பரமாக ஆர்ப்பாட்ட விழாவாக கொண்டாடுவது இல்லை. ஆனால், கழக உடன்பிறப்புகள் மக்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்குவது, கழக அரசின் சாதனைகள், கழக கொள்கைகளை எடுத்துச் சொல்லும் பொதுக்கூட்டங்கள் நடத்துகிறார்கள்.

இந்த முறை, எனது பிறந்தநாள் வேண்டுகோளாக, என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு ஒரு கோரிக்கையை முன்வைக்கிறேன். இன்றைக்கு தமிழ்நாடு தன்னுடையை உயிர்ப் பிரச்சினையான மொழிப்போரையும்- தன்னுடையை உரிமைப் பிரச்சினையான- தொகுதி மறுசீரமைப்பையும் எதிர்கொண்டிருக்கிறது. இதனுடைய உண்மையான நோக்கத்தை நீங்கள் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.

தொகுதி மறுசீரமைப்பு என்பது, நமது மாநிலத்தின் சுயமரியாதை, சமூகநீதி, அரசின் சமூக நலத்திட்டங்கள் ஆகியவற்றை பெரிதும் பாதிக்கும் என்பதை உடன்பிறப்புகள் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். ஒவ்வொருவரும் மாநிலம் காக்க எழுந்து நிற்க வேண்டும்.

இந்தியாவுக்கே வழிகாட்டியாக நாம் போராட்டத்தை தொடங்கி உள்ளோம். இன்று கர்நாடகா, பஞ்சாப், தெலுங்கானா போன்ற மாநிலங்களில் இருந்து நமக்கான ஆதரவுக் குரல் வந்துள்ளது. இதனைப் பார்த்த மத்திய அரசு இந்தியை திணிக்கவில்லை என்று சொல்லிக்கொண்டே அதற்கான எல்லா முன்னெடுப்புகளையும் எடுத்துக் கொண்டிருக்கிறது.

மும்மொழி கொள்கையை ஏற்காததால் நமக்கு வழங்க வேண்டிய பணத்தை தராமல் இழுத்தடிக்கிறார்கள். அதேபோல், "தமிழ்நாட்டுக்கான தொகுதிகளை குறைக்க மாட்டோம்"- என்று மட்டும் தான் சொல்கிறார்களே தவிர, மற்ற மாநிலங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க மாட்டோம் என்று சொல்வதில்லை. மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகளை பிரிக்கக்கூடாது; நாட்டின் வளர்ச்சிக்காக மக்கள் தொகையை கட்டுப்படுத்திய தென் மாநிலங்களை தண்டிக்காதீர்கள் என்று நாம் கேட்கிறோம். ஒருவேளை அதுநடந்தால், அதைத் தமிழ்நாடும் தி.மு.கவும் ஒருபோதும் ஏற்காது என்று அனைவரும் ஒரு உறுதியை எடுத்துக்கொள்ள வேண்டும்.

தமிழ்நாட்டின் நலனையும், எதிர்காலத்தையும், யாருக்காகவும் - எதற்காகவும் விட்டுதர மாட்டோம்! தமிழ்நாட்டுக்காக நாம் ஒன்றுபட்டு போராட வேண்டும்! தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்" எனத் தெரிவித்துள்ளார்.

மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையை மேற்கொள்ள மத்திய பாஜக அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதனால் தென் மாநிலங்களில் உள்ள மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் எனக் கூறப்படுகிறது.

குறிப்பாக தமிழகத்திற்கு 9 தொகுதிகள் குறைந்து 31 மக்களவை தொகுதிகளாக மாறிவிடும் என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இதுதொடர்பாக தங்களது எதிர்ப்பை தொடர்ந்து பதிவு செய்து வருகின்றன.

அதேசமயம் கோவையில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தொகுதி மறுசீரமைப்பு மூலம் தென்னிந்திய மாநிலங்களில் தொகுதிகள் குறையாது. விகிதாச்சார அடிப்படையில் கூடுதல் தொகுதிகள் தான் கிடைக்கும் என்றார். இந்நிலையில் தான் வீடியோ வாயிலாக வேண்டுகோள் விடுத்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

Trending News

Latest News

You May Like