18 வாக்குறுதிகளுக்கு கேரண்டி கேட்கும் முதல்வர் ஸ்டாலின்!
தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் அனைவரும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக பாஜக தமிழ்நாட்டில் காலூன்ற வேண்டும் என தீவிர முயற்சிகளில் ஈடுப்பட்டு வருகிறது. பாஜக தேசிய தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் தமிழ்நாட்டிற்கு வருகை தந்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். நடப்பாண்டில் மட்டும் 7-வது முறையாக பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக தமிழகம் வருகை தந்துள்ளார்.
தேர்தல் நேரங்களில் மட்டும் பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வருகை தருவதாக தனது x தளத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக அவரது பதிவில் குறிபிட்டுள்ளது, “ பருவகாலத்தில் பறவைகள் சரணாலயத்துக்கு வருவது போல், தேர்தல் காலங்களில் மட்டும் தமிழ்நாட்டில் வட்டமடிக்கும் பிரதமர் மோடி அவர்களே,
குஜராத் மாடல் - சவுக்கிதார் வேடங்கள் போலி என அம்பலமானதால், கேரண்டி கார்டுடன் தமிழ்நாட்டிற்கு வந்திருக்கும் பிரதமர் மோடி அவர்களே... இதோ இந்த கேரண்டிகளைத் தருவீர்களா என கேள்வி கேட்டுள்ளார். அதில்,
சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும். இடஒதுக்கீட்டுக்கான உச்சவரம்பு நீக்கப்படும்.
எஸ்சி, எஸ்டி, ஓபிசி இடஒதுக்கீடு முறையாகக் கடைப்பிடிக்கப்படும்.
தமிழ்நாட்டுக்கு நீட் விலக்கு அளிக்கப்படும்.
தமிழ்நாட்டில் ஒருபோதும் இந்தி மற்றும் சமஸ்கிருதம் திணிக்கப்படாது.
மாநிலப் பட்டியலுக்குக் கல்வி மாற்றம், கல்விக்கடன்கள் ரத்து
ஆண்டுக்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலை, ஊரக வேலை உறுதித் திட்டத்தில் ஊதியம் ரூ.400
வேளாண் விளைபொருட்களுக்கு நியாயமான குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம்
தாறுமாறாக உயர்த்தப்பட்ட பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் விலையைக் குறைப்பேன். செஸ், சர் சார்ஜ் என்ற வரிக் கொள்ளை அறவே நீக்கம்
அமலாக்கத்துறை - வருமான வரித்துறை - சி.பி.ஐ ஆகியவை சுதந்திரமாகச் செயல்படும். மாநிலங்களை வஞ்சிக்காத நியாயமான நிதிப் பகிர்வு தருவேன்
வணிகர்களையும் சிறு குறு தொழில்களையும் வதைக்கும் ஜிஎஸ்டி வரியில் சீர்திருத்தம் செய்யப்படும். கும்பல் வன்முறைகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவேன்.
வியாபம் முதல் தேர்தல் பத்திரங்கள் வரை பாஜகவின் ஊழல்கள் குறித்த வெளிப்படையான விசாரணைக்கு உத்தரவிடுவேன்.
கருத்துச் சுதந்திரம், பேச்சு சுதந்திரம், ஊடக சுதந்திரத்தை அனுமதிப்பேன்.
சீனா ஆக்கிரமித்துள்ள பகுதிகளை மீட்பேன்.
தமிழ்நாட்டு மீனவர்களின் படகுகளை மீட்பேன். தாக்குதலை நிறுத்துவேன்.
அக்னிபத் திட்டத்தை ரத்து செய்வேன்.
வெள்ள நிவாரணத்துக்கு தேசிய பேரிடர் நிதியில் இருந்து உடனடி ஒதுக்கீடு செய்யப்படும்.
சென்னை மெட்ரோ பணிகளுக்கு ஒப்புக்கொண்டபடி ஒன்றிய அரசின் நிதி விடுவிப்பு செய்யப்படும்.
தமிழை இந்தியாவின் அலுவல் மொழியாகவும், திருக்குறளை தேசிய நூலாகவும், உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்கம் செய்யவும் சட்டம் இயற்றுவேன்.
குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை வாபஸ் பெறுவேன். சிறுபான்மை மக்களை இரண்டாம்தரக் குடிமக்களாக நடத்த மாட்டேன்.
என இதற்கெல்லாம் நீங்கள் கேரண்டி அளிக்கத் தயாரா? இல்லையென்றால் உங்கள் கேரண்டி என்பது, ஊழல் கறை படிந்தவர்களுக்குக் காவிக்கறை பூசும் 'Made in BJP' வாஷிங் மெஷினுக்கு மட்டுமே என்பது மீண்டும் ஒருமுறை அம்பலமாகும்! என முதல்வர் ஸ்டாலின் தனது x தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று மதுரையில் நடந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசிய உரையின் சுருக்கத்தை அவரது சமூக வலைதள பக்கத்தில் முக ஸ்டாலின் பகிர்ந்துள்ளார்.