1. Home
  2. தமிழ்நாடு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளில் ஸ்டாலின் செய்யும் தரமான சம்பவம்..!

1

ஜெனரிக் மருந்துகளும், பிற மருந்துகளும் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு கிடைக்கும் வகையில் முதல்வர் மருந்தகங்கள் திட்டம் தொடங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் கடந்த ஆண்டு சுதந்திர தினவிழா உரையில் அறிவித்தார். முதல்கட்டமாக மாநிலம் முழுவதும் 1000 இடங்களில் இந்த முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்படும் எனவும் அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பி.பார்ம், டி.பார்ம் படித்தவர்கள் அல்லது அவர்களின் ஒப்புதல் பெற்றவர்கள் முதல்வர் மருந்தகம் அமைக்க இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. மேலும் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த மருந்தாளுநர்களுக்கும், கூட்டுறவு அமைப்புகளுக்கும் தேவையான கடனுதவியோடு மூன்று லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்தது.

இதில் 50 சதவீதம் பணமாகவும் 50 சதவீதம் மருந்து பொருட்களாகவும் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த திட்டத்தை செயல்படுத்த தமிழகம் முழுவதும் பலரும் விண்ணப்பித்திருந்தனர். இந்த விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு, தகுதி மற்றும் முன்னுரிமை அடிப்படையில் ஏற்று கொள்ளப்பட்டு மருந்தகங்கள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டது. மேலும் ஜெனரிக் மருந்துகளை விற்பனை செய்வதற்கான முதல்வர் மருந்தகங்களை தொடங்குவதற்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி கூட்டுறவு சங்கத்தின் மூலம் 500 மருந்தகங்களும் தொழில் முனைவோர் மூலம் 500 மருந்தகங்களும் என மொத்தம் ஆயிரம் மருந்தகங்கள் திறக்கப்பட உள்ளன. சென்னையில் 33 இடங்களிலும் மதுரையில் 52 ,கடலூரில் 49, கோவையில் 42, தஞ்சையில் 40 என்ற எண்ணிக்கையில் முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்படவுள்ளன.

இந்த முதல்வர் மருந்தகங்கள் நாளை திறக்கப்பட உள்ளன. சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக கலையரங்கில் நடைபெறும் விழாவில் முதல்வர் மருந்தகங்களை முதல்வர் முக ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இந்த முதல்வர் மருந்தகத்திற்கு தேவையான மருந்துகள் மக்கள் நல்வாழ்வுத்துறை மூலம் கொள்முதல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேவை ஏற்பட்டால் வெளிச்சந்தையிலும் மருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. மருத்துவர் அணி செயலாளர் எழிலன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாளன்று முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்படுவது குறித்த கேள்விக்கு, "மக்களுக்கான திட்டங்களை முன்னாள் முதல்-அமைச்சர் பிறந்தநாளில் கூட தொடங்கி வைக்கலாம், அதில் தவறில்லை" என்று கூறினார்.

மேலும், அம்மா மருந்தகம் மூடப்படுவதற்கான வாய்ப்பில்லை எனவும், கூட்டுறவு மருந்தகம், அம்மா மருந்தகம், பிரதமர் மருந்தகம் ஆகியவற்றுடன் முதல்வர் மருந்தகம் என ஒரு ஆரோக்கியமான போட்டியாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.

Trending News

Latest News

You May Like