ஆன்மீகம் அறிவோம் : யார் யார் எந்த வகை ருத்ராட்சத்தை பயன்படுத்தலாம்..!
ஒரு முக ருத்ராட்சம் முதல் பதினாறு முகம் ருத்ராட்சம் வரை அணிவதன் மூலம் பல பலன்களை அடையலாம்.
ருத்ராட்சத்தை கையாளும் முறை
ருத்ராக்ஷத்திற்கு என சில இயல்பு குணங்கள் உண்டு. சக்தியூட்டப்பட்ட ருத்ராட்சம் அணிந்திருப்பவர்களை மிருகம் மற்றும் விஷ ஜந்துக்கள் தீண்டாது என்பது அறிவியலுக்கும் அப்பாற்பட்ட உண்மை. இதனால்தான் காடுகளில் தவம்செய்ய செல்லும் ரிஷிகள் தங்களின் உடல் முழுவதும் ருத்ராக்ஷத்தை அணிந்தார்கள்.
ருத்ராட்சம் என்பது நமக்கு நிகரான ஒர் உயிரின் வடிவம் என அறிந்து கொள்வது அவசியம்.நீங்கள் ருத்ராக்ஷத்தை தொடர்ந்து அணிபவராக இருந்தால் உங்களுக்கு ஏற்படும் சுக-துக்கங்களின் வெளிப்பாடு ருத்ராக்ஷத்திலும் தெரியும். உங்களின் உடலில் அதிகமான உடலுக்கு ஒத்துக்கொள்ளாத வேதிப்பொருட்கள் இருந்தால் ருத்ராட்சம் தனது இயல்பு நிறத்தை மற்றிக்கொள்ளும்.
விஷபொருட்கள் உடலில் கலந்தால் ருத்ராட்சம் அந்த விஷப்பொருட்களைப் பிரித்தெடுத்து தனது வாழ்க்கையை முடித்துக்கொள்ளும்.அதன் பின் ருத்ராட்சத்திற்கு அதிர்வுகளை ஏற்கும் சக்தி இல்லை. மீண்டும் மந்திர உச்சாடணம் செய்து ருத்ராட்சத்திற்கு உரு ஏற்ற வேண்டும். இல்லையென்றால் புதிதாக உபயோகபடுத்த வேண்டும்.
ருத்ராட்சம் பயன்படுத்த எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லை. குறிப்பிட்ட ஜாதி, மத, இன வேறுபாடு கிடையாது. ஆண்/பெண் என இருவரும் பயன்படுத்தலாம். வயது மற்றும் இதர விசயங்கள் தடையாக இருக்காது. ஆனால் ஒழுக்கமும் தூய்மையும் ருத்ராக்ஷத்திற்கு முக்கியமான ஒன்று.
தூய்மையற்ற நிலையிலும் ஒழுக்கமற்ற நிலையிலும் பயன்படுத்தும் பொழுது ருத்ராக்ஷத்தின் இயல்பு நிலையான தன்மை பாதிக்கப்படுகிறது. மேலும் தெய்வீகமான ஒர் பொருளை எவ்வாறு பாதுகாப்போமோ அதற்குண்டான மரியாதையை ருத்ராட்சத்திற்கு செலுத்துவது நல்லது.
ருத்ராட்சம் மாலையை கையாளும் முறை
குரு தீட்சை பெற்றவர்கள் தினமும் ஜெபம் செய்த பிறகு ருத்ராக்ஷ மாலையை கழுத்தில் அணிவது நல்லது.ஜெபிக்கப்பட்ட மந்திரமானது ருத்ரக்ஷ மாலையில் தொடர்ந்து அதிர்வுகளை உண்டு பண்ணி அன்று முழுவதும் அவர்களை ஆனந்திக்கச் செய்யும்.
மந்திர ஜெபம் செய்யாதவர்கள் கூட ஆன்மீக ஆற்றல் வாய்ந்தவர்களிடத்தில் பிரசாதமாக வாங்கி அணிந்து கொள்ளலாம். இதை தவிர வெறுமனே ருத்ராட்சம் அணிந்தால் அது ஓர் சாதாரண அணிகலனுக்குச் சமமானது. அதை தவிர விசேஷம் அதில் இல்லை.
ருத்ராக்ஷ மாலையை பயன்படுத்தும் பொழுது நன்றாக பாதுகாப்பது முக்கியமான ஒன்று. கெமிக்கல் பொருட்கள், சோப் மற்றும் ஷாம்பு இதர செயற்கைப் பொருட்கள் படாமல் பாதுகாக்க வேண்டும்.
பயன்படுத்த துவங்குவதற்கு முன்னால் ஒரு நாள் முழுதும் பசு நெய் அல்லது நல்லெண்ணையில் ஊறவைக்க வேண்டும்.பின்பு காய்ச்சாத பசும்பாலில் கழுவி நீரில் முக்கி எடுத்து ஒரு நாள் முழுதும் ஊறவைக்க வேண்டும். பின்பு மஞ்சள் அல்லது சந்தனம் கலந்த நீரால் கழுவி ஈரம் போக துடைத்து விட்டு திருநீறில் ஒரு நாள் முழுவதும் வைக்கவேண்டும். பின்பு பூஜையில் வைத்து ஜெபங்கள் செய்து சிவாச்சாரியார் அல்லது பெற்றோர் வயதில் மூத்தவர் யார் வேண்டுமானாலும் அணிவிக்கலாம். இந்த தூய்மையாக்கும் முறையை வருடத்திற்கு ஒரு முறை செய்ய வேண்டும். மாத சிவராத்திரி அல்லது மஹாசிவராத்திரி அன்று அணியுமாறு தூய்மை வேலையை துவக்க வேண்டும்.
ஏன் ருத்ராட்சத்தை சுத்தம் செய்ய வேண்டும்
ருத்ராட்சத்தை தூய்மை செய்ய இத்தனை வேலை செய்ய வேண்டுமா என்ற மனநிலை ஏற்படுகிறதா? இதை செய்ய வேண்டிய அவசியத்தை பார்ப்போம்.
உங்கள் உடலில் மேல்தோல் முழுவதும் இல்லாமல் வெறும் சதைப்பகுதி மட்டும் வெளியே தெரிந்தால் உங்கள் உடல் எவ்வளவு உணர்வு மயமாக இருக்கும். இதற்கு ஒப்பானது ருத்ராட்சத்தின் உணர்வு நிலை. அதனால் தான் மேற்பகுதியை கடினமாக்கவும், உணர்வு மிகாமல் சரியான நிலையை அடைய இயற்கையான பொருள் மூலம் சுத்திகரிக்க முயல்கிறோம்.
உண்மையில் ருத்ராக்ஷத்திற்கு பலன் தருவது, செல்வம் கொடுப்பது போன்ற செயல் செய்வது கிடையாது. நவரத்தின கல் போல இதனையும் வியாபாரமாக்கும் யுக்தியே இந்த பிரச்சாரம்.
ருத்ராட்சத்தை தங்கம், தாமிரம்,வெள்ளி அல்லது பருத்தி நூலில் மாலையாக அணிவது நல்லது. நூலில் அணியும் பொழுது மட்டும் நெருக்கமாக கோர்த்து அணிய வேண்டும். ருத்ராட்ச வடிவங்களுக்கு என்று சில முக்கிய செயல்கள் உண்டு.
யார் யார் எந்த வகை ருத்ராட்சத்தை பயன் படுத்தலாம்
1. ஐந்து முக ருத்ராக்ஷத்தை மட்டுமே (கிரஹஸ்தர்கள்) குடும்ப வாழ்க்கையில் உள்ளவர்கள் பயன்படுத்தலாம்.
2. ஏக முக என அழைக்கப்படும் ஒருமுக ருத்ராட்சம் சன்யாசிகள் மட்டுமே அணியவேண்டும். பிறர் வீட்டில் உள்ள சாலிக்ராமம் மற்றும் விக்ரஹம் போல வைத்து பூஜை செய்யலாம்.
3. நான்கு முக ருத்ராக்ஷத்தை பயன்படுத்தினால் கலை நயம், சங்கீத ஞானம் போன்ற கலையாற்றல் வளரும். குழந்தை பிறப்பு இல்லாமல் சிரமப்படுபவர்களுக்கு நான்கு முக ருத்ராக்ஷத்தை பயன்படுத்துவதால் தடை நீங்க வாய்ப்பு உண்டு.
4. துடிப்பு இல்லாமல் சோர்வுடன் இருக்கும் பன்னிரெண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஆறுமுக (ஷண்முகி) ருத்ராட்சம் நல்ல பலனை அளிக்கும்.
5. மணவாழ்க்கையில் வாழ்க்கைத் துணைவருடன் பிரிவு உள்ளவர்கள் கௌரி சங்கர் என்ற ருத்ராட்ச வகையை அணிந்தால் மண வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டு.
தனியாக ஒரே ஒரு ருத்ராட்சம் அணிவதை விட மணிமாலையாக அணிவது நல்லது. பஞ்சமுக ருத்ராக்ஷத்தை தவிர வேறு வகையான ருத்ராட்சம் கிடைப்பது அரிது. எனவே நமது பஞ்ச ப்ராணன்களில் சக்தி நிலை மேம்பட 108 மணிகள் கொண்ட ஐந்துமுக ருத்ராக்ஷத்தை அணிந்தால் அனைத்து மேம்பாட்டையும் பெறலாம்.
ருத்ராட்சம் தரம் காண்பது எப்படி ..?
ருத்ராக்ஷத்தில் போலியான மணிகள் வருவதுண்டு. இதை எவ்வாறு கண்டறிவது என குழப்பம் அனைவருக்கும் உண்டு.
ஒரு இலந்தைப் பழத்தின் அளவுள்ள ருத்ராட்சம் மத்தியமான தரம், அதன் அளவு கூட கூட அதன் தரம் உயரும், அளவு குறைய குறைய தரம் குறையும். பத்ராட்சம் என்ற மணி ருத்ராட்சம் போலவே இருக்கும், அவை நல்ல பலன்களைத் தராது. உண்மையான ருத்ராட்சத்தை நீரில் போட்டால் மூழ்கி விடும் போலியானவை மிதக்கும்.மேலும் கல்லில் உரைக்கும் போது தங்க நிற கோடுகள் கல்லில் பதியும். இரு செம்பு நாணயங்கள் நடுவில் ருத்ராட்சத்தை வைத்தால், மின் சுழற்சியின் காரணமாக அது சுழலும். இவ்வாறு உண்மையான ருத்ராட்சத்தை சில ஆய்வுகள் மூலம் கண்டறியலாம்.
தாவர வகைகளில் மின் காந்த சக்தி ஒரு குறிப்பிடும் அளவு உள்ளது ருத்ராட்சத்தில் மட்டும்தான். ருத்ராட்சத்தை அணிவதாயின் சிவப்பு நிற நூலில் அணியவேண்டும். அல்லது செம்புக் கம்பியிலோ, தங்கக் கம்பியிலோ, வெள்ளிக் கம்பியிலோ அணியலாம். தகுந்த பரிசோதனைக்குப் பிறகு வாங்குவது நல்லது.
ஜோதிட ரீதியாகவும் ருத்ராட்சம் பயன்படும் என்றே கூறலாம். ஒருமுக ருத்ராட்சம் முதல் அதன் வரிசைகிரமமாக உள்ள முக அமைப்புகள் சூரியன் முதல் சனி வரை உள்ள வானியல் அடிப்படையான கிரக வரிசைக்கு சமமானவை. எந்த கிரகத்தின் ஆற்றல் தேவையோ அந்த கிரகத்தின் அமைப்பு கொண்ட ருத்ராக்ஷத்தில் கிரகத்தின் மூலமந்திரத்தை ஜெபம் செய்து அணியலாம்.
ருத்ராட்ச மகிமை
ருத்ராக்ஷத்தை பல லட்ச ரூபாய் விலையில் விற்கவும் வாங்கவும் ஆட்கள் தயாராக இருக்கிறார்கள். பத்திரிகையிலும், தொலைக்காட்சிகளிலும் விளம்பரம் செய்கிறார்கள். பல கோடி ரூபாய் செல்வம் சேர ருத்ராட்சம் அணியுங்கள் என பிரச்சாரம் செய்கிறார்கள்.
எனக்கு தெரிந்தவரை எந்த ஒரு உடல் முழுவதும் ருத்ராட்சம் அணியும் எந்த சிவனடியாரும் கோடிஸ்வரராக இருந்து பார்த்ததில்லை. பிறருக்கு கோடிகளை அளிக்கும் ருத்ராக்ஷத்தை விற்கும் வியாபாரி ஏன் கோடீஸ்வரன் ஆவதில்லை என சிந்தித்துப் பார்த்தால் நிதர்சனம் புரியும்.
ருத்ராக்ஷத்தைக் கொண்டு கோடீஸ்வரனாக முடியாது. ஆனால் அண்டத்தைப் படைத்த ஈஸ்வரன் அருளை பெற முடியும். லஷ்மியை அடைய முடியாவிட்டாலும் ஆன்ம லட்சயத்தை, வாழ்வாதாரத்திற்கு தேவையான பொருளை ஈட்ட முடியும். பிறப்பு இறப்பு அற்ற நிலையை அடையும் முக்தி எனும் விருட்சத்தை வளர்க்க ருத்ராட்சம் என்ற விதையை விதையுங்கள்.
இறந்த வீட்டிற்கு செல்லும் பொழுது சிலர் அணிய கூடாது என சொல்லுவார்கள். ருத்ராட்சம்த்தை காக்கும் கடவுளாக பார்க்க வேண்டும். எங்கெல்லாம் உங்கள் உடல்,மனம் மற்றும் ஆன்மா தவறான சக்திக்கு ஆட்படுமோ அங்கெல்லாம் அணியலாம். எப்பொழுதும் ஜபம் செய்த மாலையை கழுத்தில் அணிவது நல்லது. ஜபிக்கபட்ட மந்திரங்கள் அதில் நிறைந்திருக்கும்.
உங்கள் அலைபேசியில் சார்ஜ் செய்து விட்டு, வீட்டில் வைத்திருந்தால் என்ன பலன்? ஜபம் செய்ததும் மாலையை அணிந்தால் அன்று வித்தியாசமான உள்ளுணர்வு இருப்பதை உணரலாம். முயற்சித்து பார்த்து விட்டு சொல்லுங்கள்.