சிறப்பு எஸ்ஐ கொலை வழக்கு.. சிறுவர்கள் சிக்கியது இப்படித்தான்..!

நவல்பட்டு சிறப்பு எஸ்ஐ வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில், 10 வயது, 17 வயது சிறுவர்கள் மற்றும் 19 வயது இளைஞர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். கைது செய்யப்பட்டவர்களை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அடுத்த பள்ளப்பட்டி நவல்பட்டு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் பூமிநாதன். இவர், ஆடு திருடியவர்களை விரட்டிச் சென்றபோது நேற்று அதிகாலை வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.
ஆடு திருடிய 2 சிறுவர்கள் உள்ளிட்ட மூன்று பேரையும் துரத்தி சென்று ரயில்வே சுரங்கப் பாதை அருகே மடக்கி பிடித்து இருக்கிறார் பூமிநாதன். மடக்கிப் பிடித்ததும், நவல்பட்டு காவல் நிலையத்தில் பணிபுரிந்த மற்றொரு சிறப்பு உதவியாளர் சேகர் என்பவருக்கு தகவல் தெரிவித்திருக்கிறார். அப்போது தனது செல்போனில் இருந்து லொகேஷன் ஷேர் செய்து இருக்கிறார் பூமிநாதன். இதன் பின்னர் இரண்டு சிறுவர்கள் உட்பட மூன்று பேரில் ஒருவரின் தாயாரிடம் பூமிநாதன் 23 நிமிடங்கள் தொலைபேசியில் பேசியிருக்கிறார். அந்த சிறுவனைப் பற்றிய விவரங்களை கேட்டு அறிந்திருக்கிறார்.
இதன் பின்னர்தான் அவர்கள் பூமிநாதனை வெட்டிப் படுகொலை செய்திருக்கிறார்கள். பூமிநாதன் செல்போனில் இருந்து கடைசியாக சென்ற செல்போன் கால் யார் என்பதை பார்த்தும், யாரிடம் அவர் பேசினார் என்பதை வைத்தும் போலீசார் நடத்திய விசாரணையில் தான் சிறுவர்கள் சிக்கியிருக்கிறார்கள்.
இந்த கொலை வழக்கில் 19 வயது இளைஞர் , 17 வயது சிறுவன் 10 வயது சிறுவன் உள்ளிட்ட 4 பேரை தனிப்படை போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.