சிவகாசி: பட்டாசு ஆலையில் விபத்து - 3 பேர் உயிரிழப்பு

சிவகாசி அருகே உள்ள காளையார்குறிச்சியில் ஜெய்சங்கர் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த ஆலையில், 30-க்கும் மேற்பட்ட அறைகளில் பேன்ஸி ரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. 50-க்கும் மேற்பட்டோர் இங்கு பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், இன்று (ஏப்.26) காலை பேன்ஸி ரக பட்டாசுகளுக்கு மருந்து செலுத்தும்போது உராய்வு காரணமாக வெடி விபத்து ஏற்பட்டது. இதில், 2 அறைகள் சேதமடைந்தன. அங்கு பணியாற்றிய அடையாளம் தெரியாத 3 பெண்கள் உடல் சிதறி உயிரிழந்தனர். 7 பேர் காயமடைந்தனர். தகவலறிந்த சிவகாசி தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அனைத்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இடிபாடுகளில் சிக்கி இருந்த அடையாளம் தெரியாத மூன்று பெண்களின் சடலம் மீட்கப்பட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டது.மேலும், காயமடைந்த 7 பேர் மீட்கப்பட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.