சிவகார்த்திகேயன் பட ஷூட்டிங்கில் விபத்து..! துண்டான விரல்: அதிர்ச்சி தகவல்..!
‘மதராஸி’ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. ‘மதராஸி’ படத்தில் சிவகார்த்திகேயன், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், ருக்மணி வசந்த், விக்ராந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசையமைப்பாளராக அனிருத் பணிபுரிந்துள்ளார்.
'துப்பாக்கி’ படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்திருந்த வித்யுத் ஜாம்வால், இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் நடித்துள்ளார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய சிவகார்த்திகேயன், ரஜினிகாந்த், சல்மான் கான் என நிறைய பேருடன் பணியாற்றிய ஏ.ஆர்.முருகதாஸ், அந்த பட்டியலில் தன்னையும் சேர்த்ததற்கு நன்றி என்றார். முருகதாஸ் பெயரில் தனது தந்தையின் பெயரும் இருப்பதாகக் குறிப்பிட்ட சிவகார்த்திகேயன், தந்தைக்கு ‘ரமணா’ படம் மிகவும் பிடிக்கும், அவர் இருந்திருந்தால் மகிழ்ந்திருப்பார் என உணர்ச்சிப் பொங்க கூறினார்.
இந்நிலையில், இதே விழாவில் பேசிய இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் படப்பிடிப்பில் நடந்த அதிர்ச்சியான சம்பவத்தை விவரித்தார். ஏ.ஆர்.முருகதாஸ் பேசுகையில், இலங்கையில் படப்பிடிப்பின் போது, திடீரென்று புயல் ஏற்பட்டது. இதில், ஒளிப்பதிவாளர் ஒருவர், ட்ரோன் கேமரா யார் மீதும் மோதி விடக்கூடாது என்பதற்காக அதை பிடிக்க ஓடியபோது, பிளேடு கையில் பட்டு அவரது விரல் துண்டானது. விரலை தேடிப்பிடித்து சிகிச்சைக்கு அனுப்பி வைத்தோம்" என்றார்.விரலைச் சேர்த்த மறுநாளே அவர் மீண்டும் படப்பிடிப்புக்கு வந்துவிட்டார்" என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் சிவகார்த்திகேயனை பார்த்து பலர் ஊக்கமடைந்து வருவதாக கூறினார். அதேபோல், விஜய்யின் மூன்று படங்களிலும் தான் கேமியோ ரோலில் நடித்துள்ளது போல, இந்தப் படத்திலும் நடித்திருப்பதாக தெரிவித்தார்.