அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டால் உடனே பணி நீக்கம் : அரசியல்வாதிக்கு பொருந்த வேண்டாமா? பாஜக கேள்வி
மத்திய உள் துறை அமைச்சர் அமித்ஷா முக்கியமான மசோதா ஒன்றை தாக்கல் செய்தார். அதாவது, 5 ஆண்டுகள் தண்டனைப் பெறக்கூடிய குற்ற வழக்குகளில் பிரதமர், முதலமைச்சர், மத்திய மற்றும் மாநில அமைச்சர்கள் கைது செய்யப்பட்டால் அவர்களை பதவி நீக்கம் செய்யும் மசோதா அது. அதாவது 30 நாட்கள் ஒரு அமைச்சர் சிறையில் இருந்தால் அவரை பதவி நீக்கம் செய்ய பரிந்துரைக்கலாம் அல்லது 31வது நாள் அவர் தானாகவே பதவியை இழந்துவிடுவார் என்று சட்டத் திருத்தத்தில் உள்ளது.
எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த முதல்வர்கள் அரவிந்த் கெஜ்ரிவால், ஹேமந்த் சோரன் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் அமலாக்கத் துறை கைது செய்யப்பட்டனர். இவர்களில் கெஜ்ரிவாலும், செந்தில் பாலாஜியும் தங்களது பதவிகளை வெகு நாட்களுக்குப் பிறகே ராஜினாமா செய்தனர். இந்த சூழலில் இவ்வாறான மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது எதிர்க்கட்சிகளை ஒடுக்கவே என்று கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்த மசோதாவானது நாடாளுமன்ற நிலைக் குழுவுக்கு அனுப்பப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் பாஜக தமிழக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தனது எக்ஸ் பக்கத்தில், அமலாக்கத்துறை மூலம் அரசியல் பழிவாங்க இந்த சட்டம் பயன்படுத்தப்படும் என்றும் இது வரை அமலாக்கத்துறை தொடுத்த வழக்குகளில் 2 சதவிகிதம் மட்டுமே தண்டனை பெறப்பட்டுள்ளன என்றும் வதந்தியை பரப்பி வருகின்றனர். ஆனால், இது வரை அமலாக்கத்துறையினால் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு அளிக்கப்பட்ட 47 வழக்குகளில் 44 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு தண்டனை பெற்றிருக்கிறார்கள். மூன்றே வழக்குகளில் மட்டுமே குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று விளக்கம் அளித்தார்.
2003 ம் ஆண்டு சட்ட விரோத பணபரிமாற்ற சட்டம் உருவாக்கப்பட்டிருந்தாலும் ஜூலை 1, 2005 முதல் தான் இந்த சட்டம் அமலுக்கு வந்த நிலையில், முதல் குற்றப்பத்திரிகையே 2012 ம் ஆண்டு தான் தாக்கல் செய்யப்பட்டது என்றும், பெரும்பாலும் முகாந்திரம் இல்லாமல் அமலாக்கத்துறை வழக்குகளை பதிவு செய்வது இல்லை. மேலும், மாநில காவல்துறை, லஞ்ச ஒழிப்பு துறை உள்ளிட்ட பல்வேறு விசாரணை அமைப்புகள் பதிவு செய்யும் வழக்குகளின் அடிப்படையிலேயே அமலாக்கத்துறை தன் விசாரணையை விரிவுபடுத்துகிறது என்பதால் எதிர்க்கட்சிகள் சொல்வது போன்று பழிவாங்கும் நடவடிக்கை என்ற குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது எனவும் விவரித்தார். தமிழகத்தில் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி கைதாகி சிறையில் இருந்த போதும் அமைச்சராக தொடர்ந்தது, அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி முதலமைச்சராக தொடர்ந்தது போன்ற பல்வேறு உதாரணங்கள் இந்த சட்டத்திற்கான தேவையை உணர்த்துகின்றன என்ற நாராயணன் திருப்பதி, “ஒரு அரசு ஊழியர் குற்ற வழக்கில் கைதாகி சிறையில் 48 மணிநேரம் இருந்தாலே, தற்காலிக பணிநீக்கம் செய்யப்படுகிற நிலையில், அரசியல்வாதிகளுக்கும் அது பொருந்த வேண்டும் என்ற சட்டத்தில் என்ன தவறு இருக்கிறது?” என்று கேள்வி எழுப்பினார்.
அரசியல் அதிகாரத்தை வைத்து ஆதிக்கம் செலுத்தி, தங்களின் ஊழலை, குற்றத்தை, முறைகேடுகளை மறைக்க முயலும் அரசியல்வாதிகளின் முயற்சியை தடுக்கவே இந்த மசோதா என்பதை சாதாரண மக்கள் வரவேற்கிறார்கள். ஊழல்வாதிகள் எதிர்க்கிறார்கள். இந்த மசோதா சட்டமானால் இந்தியாவில் ஊழல் பெருமளவில் குறையும் என்றும் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
.png)