கிருஷ்ண ஜெயந்தியை இன்று கொண்டாடுவதா அல்லது நாளை கொண்டாடுவதா..?

கிருஷ்ண ஜெயந்தி விழாவாக நாம் ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறோம். கிருஷ்ண ஜெயந்தி, கோகுலாஷ்டமி, ஜென்மாஷ்டமி, கிருஷ்ண ஜென்மாஷ்டமி என பல பெயர்களால் அழைக்கப்படும் இந்த பண்டிகை இந்துக்களின் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாகும்.
புராணங்களின் படி, பகவான் கிருஷ்ணர், ஆவணி மாத தேய்பிறை அஷ்டமி நாளில் நள்ளிரவில், வசுதேவருக்கும் தேவகிக்கும் எட்டாவது குழந்தையாக அவதரித்தார் என சொல்லப்படுகிறது. இதனால் ஆவணி மாத தேய்பிறை அஷ்டமி நாளில் கோகுலாஷ்டமி கொண்டாடப்படுகிறது. அஷ்டமி திதியும், ரோகிணி நட்சத்திரமும் இணைந்து வரும் நாளே கோகுலாஷ்டமியாகும்.
இந்த ஆண்டு செப்டம்பர் 06 ம் தேதி கோகுலாஷ்டமி என நாட்காட்டிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் செப்டம்பர் 06 ம் தேதி இரவு 09.14 க்கு பிறகே அஷ்டமி திதி துவங்குகிறது. அதே போல் செப்டம்பர் 06 ம் தேதி மாலை 03.25 க்கு பிறகே ரோகிணி நட்சத்திரம் துவங்குகிறது. அதோடு செப்டம்பர் 07 ம் தேதி தான் நாள் முழுவதும் அஷ்டமி திதி காணப்படுகிறது. அன்று இரவு 09.14 மணிக்கு பிறகே நவமி திதி துவங்குகிறது. அதே போல் செப்டம்பர் 07 ம் தேதி மாலை 03.59 வரை ரோகிணி நட்சத்திரம் உள்ளது. அதற்கு பிறகே மிருகசீரிஷம் நட்சத்திரம் துவங்குகிறது.
இதனால் கிருஷ்ண ஜெயந்தியை செப்டம்பர் 06 ம் தேதி கொண்டாடுவதா அல்லது செப்டம்பர் 07 ம் தேதி கொண்டாடுவதா என்ற குழப்பம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. ஆனால் கிருஷ்ணர் அவதரித்தது நள்ளிரவு நேரத்தில் என்பதால் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடுவதற்கான நாள் செப்டம்பர் 06 ம் தேதி தான்.
கிருஷ்ணரை வழிபட பூஜை செய்வதற்கு மாலை 4.45 மணி முதல் இரவு 7.30 மணி வரை உள்ளது. கிருஷ்ண ஜெயந்தி நாளில் விரதமிருந்து வழிபடுவது கிருஷ்ணரின் அருளைப் பெறலாம். புத்திர பாக்கியம் வேண்டுபவர்கள் கிருஷ்ண ஜெயந்தி நாளில் பூஜை செய்து கண்ணனை வணங்கினால் உங்கள் வீட்டிலும் தனது பிஞ்சு பாதத்தில் கோலம் போட கண்ணன் பிறப்பான். கோகுலாஷ்டமி நாளில் கிருஷ்ணருக்கு பிடித்த முறுக்கு, சீடை, அதிரசம், வெண்ணெய் உள்ளிட்ட பலகாரங்களைப் படைத்து நம்பிக்கையுடன் பூஜை செய்யுங்கள் நல்லதே நடக்கும்.
செப்டம்பர் 06 ம் தேதி பகல் முழுவதும் விரதம் இருந்து, மாலை சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு கோவிலுக்கு சென்று, அங்கு நடக்கும் கிருஷ்ண ஜெயந்தி பூஜைகள், கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளலாம்.