வெளியான அதிர்ச்சி தகவல்..! முட்டை மயோனைஸை தடை செய்யுமா அரசு??
முட்டை கொண்டு செய்யப்படும் மயோனைஸின் பயன்பாடு மற்றும் உற்பத்திக்கு தடை விதிக்க ஹைதராபாத் உணவு பாதுகாப்பு துறை தெலுங்கானா அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. மயோனைஸ் கலந்த ஷவர்மா, சிக்கன் போன்ற உணவுப் பொருட்களை சாப்பிட்டு மக்களின் உடல் நலம் பாதிக்கப்படுவது அதிகரித்த நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
துரித உணவகங்களில் சவர்மா, பீட்சா உள்ளிட்ட உணவுப் பொருட்களில் முட்டை மயோனைஸ் சேர்த்து ருசி அதிகமாக்கப்படும் நிலையில், நகர்ப்புறங்களில் மயோனைஸ் பயன்பாடு அதிகரித்து வருகிறது.
மயோனைஸ் முழுக்க முழுக்க முட்டை வெள்ளை, கரு, சர்க்கரை, உப்பு, எண்ணெய் ஆகியவற்றால் தயாரிக்கப்படுகிறது. இத்தகைய தயாரிப்பில், பாக்டீரியாக்கள் இனப்பெருக்கம் செய்ய ஏதுவானதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் மயோனைஸ் கலந்த சவர்மா சாப்பிட்ட நான்கு பேருக்கு கடுமையான வயிற்றுப்போக்கு ஏற்பட்டது, இதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதன் காரணமாக மயோனைஸ் விற்பனை செய்யும் கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு நடத்தினர், இதில் பாக்டீரியாக்கள் இருப்பது தெரியவந்துள்ளது.
இதையடுத்து தெலுங்கானா மாநிலத்தில் முட்டை மயோனைஸ் தடை குறித்து பரிசீலனை செய்து வருவதாக கூறப்படுகிறது.