1. Home
  2. தமிழ்நாடு

கறார் காட்டிய வங்கிக்கு, அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த வாடிக்கையாளர்!

கறார் காட்டிய வங்கிக்கு, அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த வாடிக்கையாளர்!

நாடு முழுவதும் மின்னணு பண பரிமாற்றம் செயல்படுத்தப்பட்ட பிறகு வங்கிக்கு செல்லும் அலைச்சல் மிச்சம் என்றாலும், அத்தியாவசியமான சில சேவைகளுக்கு வங்கிக்கு நேரில் செல்லும் கட்டாயம் உள்ளது.

இவ்வாறு அவசர தேவைக்காக வங்கி செல்லும் வாடிக்கையாளர்களிடம் சில வங்கி அதிகாரிகள் அலட்சியமாக நடப்பதால் பல வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இது போன்று ஒரு வங்கி வாடிக்கையாளரை அலைக்கழித்த நிலையில், வங்கியையே மிரள வைத்துள்ளார் மதுரையை சேர்ந்த முரளி.

மதுரை பழங்காநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் முரளி கிருஷ்ணன். இவர் நீண்டகாலமாக கரூர் வைஸ்யா வங்கியின் வாடிக்கையாளராக உள்ளார். சமீபத்தில் அவருடைய வங்கி காசோலை புத்தகத்தாள் தீர்ந்து போயுள்ளது. இதையடுத்து புதிதாக காசோலை புத்தகம் பெற வங்கிக்குச் சென்றுள்ளார்.

அப்போது அங்கிருந்த வங்கி ஊழியர் ஒருவர், வங்கி கணக்குடன் செல்போன் எண்ணை இணைக்கவேண்டும் அப்போது தான் புதிய காசோலை வழங்க முடியும் என கூறியுள்ளார். அப்போது, முரளி கிருஷ்ணன் இதுபோன்ற எந்த நிபந்தனையும் வங்கிகளில் இல்லையே என கேள்வி எழுப்பியுள்ளார். ஆனால் வங்கி நிர்வாகம் முறையாக பதிலளிக்கவில்லை.

ஆத்திரமடைந்த முரளி கிருஷ்ணன், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ரிசர்வ் வங்கிக்கு கேள்வி எழுப்பியிருந்தார். ரிசர்வ் வங்கி முரளிக்கு அனுப்பியிருந்த பதில் கடிதத்தில், வங்கி காசோலை புத்தகம் வழங்குவதற்கு, செல்போன் எண் அவசியமில்லை என்றும் தெரிவித்துள்ளது.

இதையடுத்து இரண்டு நாட்களில் வங்கியில் இருந்து முரளிக்கு காசோலை புத்தகத்தை அனுப்பி வைத்துள்ளனர். ஆனால், முரளி கிருஷ்ணன், தனக்கு தேவை ஏற்பட்டபோது காசோலை புத்தகம் வழங்காமல் இழுத்தடித்த வங்கியால், பல நாட்களாக பணப்பரிவர்த்தனை செய்ய முடியாமல், ஏற்பட்ட நஷ்டத்திற்கு நஷ்ட ஈடு கேட்டு நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

முரளியின் இந்த நடவடிக்கையால் அதிர்ச்சி அடைந்த வங்கி நிர்வாகம் தங்களின் செயலுக்கு வருத்தம் தெரிவித்து முரளிக்கு கடிதம் அனுப்பியுள்ளது. அதே நேரத்தில் வங்கிக்கு முரளி கிருஷ்ணன் கொடுத்த பதிலடி தக்க பதிலடி என பலரும் பாராட்டி வருகின்றனர்.

Newstm.in

newstm.in

Trending News

Latest News

You May Like