சென்னையில் அதிர்ச்சி..! டீ குடிக்க போன சென்னை ஐ.ஐ.டி. மாணவிக்கு பாலியல் தொல்லை!

சென்னை அண்ணா பல்கலையில் மாணவிக்கு நிகழ்ந்த பாலியல் வன்கொடுமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அரசியல் ரீதியாகவும் இந்த சம்பவம் பெரிதாக பேசப்பட்டது. அதன் பின்னர் புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலையில் வடமாநில மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார்.
இந்த இரு சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், சென்னை ஐ.ஐ.டி., மாணவி ஒருவர் பாலியல் தொல்லைக்கு ஆளான சம்பவம் அரங்கேறி இருக்கிறது. பாதிப்புக்குள்ளான மாணவி, சம்பவம் நடைபெற்ற தினத்தில் டீ குடிப்பதற்காக வெளியே சென்றுள்ளார்.
அப்போது அங்கு பணியாற்றிய உ.பி., மாநிலத்தைச் சேர்ந்த ஸ்ரீராம் என்பவர் மாணவியிடம் அத்துமீறி நடந்து கொண்டார். அதிர்ச்சி அடைந்த மாணவி, போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரை தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசார், ஸ்ரீராமை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த சம்பவம் ஐஐடி வளாகத்துக்கு வெளியே நடந்துள்ளது என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.