மதுபிரியர்கள் ஷாக்..! நாளை மறுநாள் முதல் மதுபானம் விலை உயர்கிறது..!

மதுபானங்களின் விலையை உயர்த்தவுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, வரும் பிப்ரவரி 1-ம் தேதி முதல் மதுபானங்களின் விலை அதிகரிக்கவுள்ளது. சாதாரண மற்றும் நடுத்தர வகை மதுபானங்கள் குவார்ட்டருக்கு ரூ.10 உயர்த்தப்பட்டிருக்கிறது.
இதுகுறித்து டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "மதுபானங்களின் மீதான கலால் வரி உயர்த்தப்பட்டு அதனடிப்படையில் மதுபானங்களின் விலை உயர்வானது 01.02.2024 தேதியிலிருந்து அமலுக்கு வருகிறது. எனவே, 180 மி.லி. அளவு கொண்ட சாதாரண மற்றும் நடுத்தர ரக மதுபானங்களின் விலை ரூ.10/- உயர்த்தப்பட்டுள்ளது. 180 மி.லி. அளவு கொண்ட உயர்தர ரக மதுபானங்கள் விலை ரூ.20/- உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், 650 மி.லி. அளவு கொண்ட பீர் வகைகளின் விலை ரூ.10/- உயர்த்தப்பட்டுள்ளது.
மேற்கண்ட விலை உயர்வின் அடிப்படையில் 375 மி.லி., 750 மி.லி., 1000 மி.லி. கொள்ளளவுகளில் விற்கப்படும் மதுபான ரகங்களும் மற்றும் 325 மி.லி., 500 மி.லி. கொள்ளளவுகளில் விற்கப்படும் பீர் வகைகளும் அந்தந்த ரகத்திற்கும் மற்றும் கொள்ளளவுக்கும் ஏற்றவாறு விலை உயர்த்தப்பட்டு விற்கப்படும்" எனக் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய், 20 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ள நிலையில், இந்த விலை உயர்வு மதுப்பிரியர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.