அதிர்ச்சி! நூல் மில்லில் இளம்பெண் காதலனால் குத்திக் கொலை!!

நாமக்கலில் நூல் மில்லில் காதலர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் இளம்பெண் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பரமத்திவேலூர் அருகே நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் தனியாருக்குச் சொந்தமான நூற்பாலை இயங்கி வருகிறது. இதில் வட மாநிலத்தைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நூற்பாலையில் சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த துளசி (20), ரூபேஷ்குமார் (வயது 24) ஆகியோர் வேலை செய்து வந்தனர்.
இவர்கள் இருவரும் காதலித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் பணியை முடித்துவிட்டு வந்த துளசி தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதியில் உள்ள தனது வீட்டில் இருந்தார். துளசியை பார்ப்பதற்காக ரூபேஷ்குமார் அங்கு சென்றுள்ளார்.
சிறிது நேரத்தில் காதலர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறிய நிலையில் திடீரென இருவரும் ஒருவரையொருவர் ஆவேசமாக கத்தியால் குத்திக் கொண்டனர்.
அவர்களது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் சென்று பார்த்தபோது இருவரும் ரத்த காயத்துடன் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் அங்கு விரைந்து வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அவர்களை மீட்டு பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் துளசி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பலத்த காயமடைந்த ரூபேஷ்குமாருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல்சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
newstm.in