அதிர்ச்சி..! கோவையில் கல்லூரி மாணவர் தூக்கு போட்டு தற்கொலை..!

கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்த தமிழரசன், கோவையில் உள்ள கற்பகம் மருந்தியல் கல்லூரியில் பி.பார்ம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். அவர் கல்லூரியின் விடுதியில் தங்கி இருந்தார். கடந்த சனிக்கிழமை, தமிழரசன் அதே கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் யுகேஷ், ரகு ஆகிய இரண்டு மாணவர்களை விடுதி காப்பாளருக்கு தெரியாமல் வெளியே அழைத்து சென்றுள்ளார்.
பின்னர் இரவு விடுதிக்கு வந்தபோது, விடுதி காப்பாளர் இதை கண்டுபிடித்து மாணவர்களின் அடையாள அட்டைகளை வாங்கி வைத்துள்ளார். மேலும், இது குறித்து கல்லூரியின் பி.பார்ம் துறை தலைவர் கந்தசாமிக்கு தகவல் அளித்துள்ளார். துறைத் தலைவர் கந்தசாமி விசாரணை நடத்தி தமிழரசனின் பெற்றோரிடம் விஷயத்தை கூறியுள்ளார்.
நேற்று துறை ரீதியான விசாரணை முடிந்து, தமிழரசனை மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு வகுப்பறைக்கு செல்லுமாறு கூறியுள்ளனர். மன்னிப்பு கடிதம் எழுத விடுதிக்கு சென்ற தமிழரசன் மன உளைச்சலில் இருந்ததாக தெரிகிறது.
அவரது அறையிலேயே தமிழரசன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மாணவர் தூக்கில் தொங்குவதை கண்ட சக மாணவர் சிலம்பரசன் அங்கிருந்தவர்களுக்கு தகவல் அளித்துள்ளார். உடனடியாக தமிழரசனை அருகில் உள்ள கற்பகம் மருத்துவக் கல்லூரியில் சேர்த்துள்ளனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக செட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பாராமெடிக்கல் மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் முடிவதற்குள் மற்றொரு கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.