மத்திய வெளியுறவு துறைக்கு சிவ்தாஸ் மீனா கடிதம்..!
![11](https://newstm.in/static/c1e/client/106785/uploaded/4cefdb3548e59f6ca84c9ff7518090d2.jpg?width=836&height=470&resizemode=4)
மத்திய வெளியுறவுத் துறை செயலாளருக்கு தமிழக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது, கடந்த 5.12.2023 அன்று குவைத் கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்ட நான்கு தமிழக மீனவர்களை விடுவித்திட உரிய தூதரக வழிமுறைகளைப் பின்பற்றி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்தி, முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு 9.2.2024 அன்று கடிதம் எழுதியிருந்தார்.
தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் அண்டை நாடுகளைச் சேர்ந்த கடற்படையினரால் அடிக்கடி கைது செய்யப்பட்டு வரும் நிலையில், தமிழக மீனவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்திடவும், அவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளைப் பாதுகாத்திடவும் உரிய தூதரக வழிமுறைகளைப் பின்பற்றி விரைவான, தீர்க்கமான நடவடிக்கை எடுக்குமாறு முதல்வர் மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
குவைத் கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுதலை செய்திட விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசை, தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வந்த போதிலும், இதுவரை விடுதலை செய்யப்படாமல் இருப்பதால், அவர்களை விடுதலை செய்திட உரிய தூதரக நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.