1. Home
  2. தமிழ்நாடு

ஆன்மீகம் அறிவோம் : 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மின்னல் தாக்கி சிவலிங்கம் உடைபடும் அதிசய சிவன் கோவில்..!

1

வழக்கமாக நம்ம ஊர் கோவில்களில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடக்கும் என்று தான் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குறிப்பிட்ட ஒரு கோவிலை மின்னல் தாக்கி, அங்குள்ள சிவலிங்கம் உடைந்து நொறுங்கும் அதிசயமான நிகழ்வு நடக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? 

இமாச்சலப் பிரதேசத்தின் குலுவில் பிஜிலி என்ற மலை மீது அமைந்துள்ளது மகாதேவ் ஆலயம். பிஜிலி மகாதேவ் ஆலயம், இந்தியாவில் உள்ள மிகப் பழமையான சிவன் கோவில்களில் ஒன்றாக கருதப்படுகிறது. கோவிலை மின்னல் தாக்கி, கருவறையில் இருக்கும் சிவலிங்கம் மட்டும் துண்டு துண்டாக உடையும் அதிசயம் உலகிலேயே இந்த கோவிலில் மட்டுமே நடக்கிறது. இந்த நவீன காலத்திலும் இதை யாராலும் தடுக்க முடியவில்லை. எதற்காக நடக்கிறது என்றும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிகழ்விற்கு புராணங்களில் கதை ஒன்றும் சொல்லப்படுவதாக தலவரலாறு சொல்கிறது.

ஒரு முறை குலந்த் என்ற அரக்கன் மலைப்பாம்பு வடிவம் எடுத்து பூமியில் வாழ்ந்த உயிரினங்களை துன்புறுத்தி வந்தான். மத்தனா என்ற கிராமத்திற்கு வந்து அங்கு பாயும் வியாஸ் நதியையும் தடுத்து நிறுத்தினான். இதனால் பல உயிர்கள் நீரில் மூழ்கி இறக்க துவங்கின. இதை கண்டு கோபமடைந்த சிவ பெருமான் அந்த அரக்கனை வதம் செய்தார். இறந்த அரக்கனின் உடலே பிஜிலி மலையாக மாறியதாகவும், அதன் மீது மகாதேவ் கோவில் அமைக்கப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

அரக்கனை வதம் செய்த பிறகு, இந்திரனை அழைத்த சிவ பெருமான், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த இடத்தில் மின்னல் தாக்க வேண்டும் என கட்டளையிட்டதாக சொல்லப்படுகிறது. சிவ பெருமான் இட்ட உத்தரவின் பேரிலேயே 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த மலை மீது அமைந்துள்ள கோவிலை மின்னல் தாக்குவதாக நம்பப்படுகிறது. கோவிலை மின்னல் தாக்கினாலும் கோவிலுக்கு எந்த சேதமும் ஏற்படுவது கிடையாது. ஆனால், கருவறையில் இருக்கும் சிவலிங்கம் மட்டும் தூள் தூளாக உடையும் நிகழ்வு இன்று வரை நடந்து வருகிறது.

மின்னல் தாக்கி, சிவலிங்கம் உடைந்து துண்டுகளான பிறகு கோவில் புரோகிதர்கள், உடைந்த துண்டுகளை ஒன்றாக சேகரிக்கிறார்கள். அந்த சமயத்தில் கோவிலை சிறிது நாட்கள் மூடி விடுகிறார்கள். பிறகு அதோடு கடலை மாவு, பருப்பு, உப்பு சேர்க்காத வெண்ணெய் ஆகியவற்றை சேர்த்து பசை போல் செய்து, அந்த பசையை கொண்டு உடைந்த சிவலிங்கத்தை ஒட்ட வைக்கிறார்கள். அந்த பசையை காய்ந்ததும் அந்த சிவலிங்கத்திற்கு தண்ணீர் ஊற்றி, வழக்கம் போல் அபிஷே, ஆராதனைகள், பூஜைகள் செய்கிறார்கள். சிறிது நாட்களில் அந்த லிங்கம் முன்பு இருந்தது போலவே காட்சி தருகிறது. அதனால் சிவலிங்கம் உடைந்ததா, இல்லையா என்பது கூட யாராலும் கண்டுபிடிக்க முடியாது.

Trending News

Latest News

You May Like