திட்டம் போட்டு அக்காவை கொலை செய்துவிட்டு எதுவும் தெரியாதது போல் கதறி அழுத தங்கை..!!

சென்னையை அடுத்த ஆதம்பாக்கம் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி (34). இவர், மின்சார ரயிலில் சமோசா மற்றும் பழ வியாபாரம் செய்து வந்தார். இவர், கடந்த சில வருடங்களுக்கு முன்பு சைதாப்பேட்டையை சேர்ந்த டக்கா மணி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இமானுவேல் (11), சோபியா (7) என 2 பிள்ளைகள் உள்ளனர்.
இதற்கிடையில் டக்கா மணி இறந்துவிட்டதால் எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்த புவனேஷ் என்பவரை 2-வதாக திருமணம் செய்துகொண்டு, அவருடன் ஆதம்பாக்கத்தில் வசித்து வந்தார். ராஜேஸ்வரி ரயிலில் சமோசா மற்றும் பழ வியாபாரம் செய்து குடும்பத்தை கவனித்து வந்தார். கடந்த 3 மாதங்களாக ராஜேஸ்வரி சைதாப்பேட்டை ரயில் நிலைய நடைமேடையில் பழக்கடை வைத்து வியாபாரம் செய்து வந்துள்ளார்.
கடந்த 19-ம் தேதி இரவு தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி சென்ற மின்சார ரயிலில் பழ வியாபாரம் செய்து கொண்டிருந்தார். இந்த ரயில் இரவு 8.30 மணியளவில் சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் நின்றபோது, அதிலிருந்து ராஜேஸ்வரி இறங்கி 1 மற்றும் 2-வது நடைமேடைக்கு இடையே நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அவரை பின்தொடர்ந்து வந்த 4 மர்ம நபர்கள் திடீரென அவரை வழிமறித்தனர். பின்னர் நொடிப்பொழுதில் அந்த மர்மநபர்கள் தங்கள் கைகளில் வைத்திருத்த கத்தி மற்றும் அரிவாளால் ராஜேஸ்வரியை சரமாரியாக வெட்டிவிட்டு, அதே ரயிலில் ஏறி தப்பிச்சென்றனர். இதில், ராஜேஸ்வரியின் முகத்தில் 10 இடத்தில் வெட்டு விழுந்தது.
ரத்த வெள்ளத்தில் சரிந்த ராஜேஸ்வரி உயிருக்கு போராடினார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பயணிகள் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரயில்வே போலீசார், படுகாயமடைந்த ராஜேஸ்வரியை மீட்டு சைதாப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு ராஜேஸ்வரியை கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ராஜேஸ்வரி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக மாம்பலம் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.
அக்காவை கொலை செய்துவிட்டு இறுதி சடங்கில் குத்தாட்டம் போட்ட தங்கை#Saidapet #murder #TRAIN #Chennai pic.twitter.com/mPLn6pBMXr
— A1 (@Rukmang30340218) July 24, 2023
ராஜேஸ்வரியின் உடன் பிறந்த தங்கை நாகவள்ளிக்கு ஏற்கனவே திருமணம் ஆன நிலையில் திண்டிவனத்தைச் சேர்ந்த சக்திவேல் என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தங்கையின் கள்ளக்காதலை ராஜேஸ்வரி கண்டித்துள்ளார். மேலும், சக்திவேலை தனது தங்கையுடன் பேசக்கூடாது எனவும் மிரட்டி வந்துள்ளார்.
இந்நிலையில் ராஜேஸ்வரி மீது கொலை வெறியில் இருந்த தங்கை நாகவள்ளி மற்றும் உறவினர் ஜெகதீசன் ஆகியோர் திட்டமிட்டு ராஜேஸ்வரியை படுகொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது. இந்நிலையில் யாருக்கும் சந்தேகம் வந்துவிட கூடாது என்பதற்காக அக்காவின் சடலத்தை பார்த்து நாகவள்ளி கதறி அழுதுள்ளார். மேலும் தனது அக்காவின் இறுதி ஊர்வலத்தில் நாகவள்ளி குத்தாட்டம் போடும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.