அமைச்சர் பதவி போனாலும் செந்தில் பாலாஜிக்கு தேர்தல் களத்தில் முக்கிய பொறுப்பு..?

கோவை மாவட்ட பொறுப்பாளராக செந்தில் பாலாஜியை மு.க.ஸ்டாலின் நியமித்தார். 2022 நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுகவிற்கு பெரிய வெற்றி கிடைத்தது. அதன்பிறகு நடந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலிலும் செந்தில் பாலாஜி வியூகம் கைகொடுத்தது. திமுக அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க தீவிரமாக செயல்பட்டார். இந்த சூழலில் 2024 மக்களவை தேர்தலில் பயன்படுத்தி கொள்ள திமுக தலைமை திட்டமிட்ட நிலையில் பண மோசடி வழக்கு நெருக்கடி கொடுத்தது. விசாரணை கைதியாக சிறைக்குள் அனுப்பப்பட்டார்.
அதன்பிறகு நீண்ட இழுபறியை தொடர்ந்து ஜாமீன் கிடைத்தது. உடனே அமைச்சர் பதவியை கொடுத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இது ஒருபுறம் சர்ச்சையானாலும், திமுக தலைமை வைத்திருக்கும் நம்பிக்கையை வெளிக்காட்டியது. இந்த சூழலில் உச்ச நீதிமன்ற வழக்கு விசாரணையில் பதவியா, ஜாமீனா எனக் கேட்டு நீதிபதிகள் அதிரடி காட்டினர். இதற்கு மேல் நிலைமை மோசமாகி விடும் எனக் கருதி செந்தில் பாலாஜியிடம் ராஜினாமா கடிதம் வாங்கி கொண்டார் மு.க.ஸ்டாலின்.
கடைசியாக கோவையில் நடந்த அரசு நிகழ்ச்சியில் அமைச்சராக செந்தில் பாலாஜி கலந்து கொண்டார். அதில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் பங்கேற்றார். அப்போது கட்சி தலைமை பார்த்து கொள்ளும் என்று நம்பிக்கை அளிக்கப்பட்டது. இந்நிலையில் தான் 2026 சட்டமன்றத் தேர்தலில் கொங்கு மண்டலத்தில் தேர்தல் வியூக நிபுணராக செந்தில் பாலாஜியை பயன்படுத்தி கொள்ள திட்டமிட்டுள்ளனர்.
இதுபற்றி உதயநிதி ஸ்டாலின் சில கணக்குகளை போட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் விஜய் புது வரவாக இருக்கிறார். எனவே திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர் என நான்கு முனைப் போட்டி ஏற்படும். இது வாக்கு வங்கியை பிரித்து திமுகவிற்கு ஆட்டம் காட்டலாம். எனவே மிகவும் சீரியசாக செயல்பட்டு வாக்குகளை அறுவடைய செய்ய திமுக தலைமை காய் நகர்த்தி வருகிறது. அதற்கு செந்தில் பாலாஜி முக்கிய பங்காற்றுவார்