மீண்டும் சிக்கலில் செந்தில் பாலாஜி..! விஸ்வரூபம் எடுக்கும் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு!

செந்தில் பாலாஜியின் சட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் அமலாக்கத்துறை கடந்த ஜனவரி மாதம் கூடுதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.
குற்றப்பத்திரிக்கையில் அசோக் குமார், செந்தில் பாலாஜியின் முன்னாள் உதவியாளல் சண்முகம் உள்ளிட்ட 13 பேரின் பெயர்கள் இடம் பெற்று இருந்தன. இந்நிலையில் இந்த 13 பேரும் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி ஆஜராக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14ஆம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில் ஓராண்டுக்கும் மேலாகச் சிறையில் இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு பலமுறை நிராகரிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதில் பல கட்ட முயற்சிக்கு பிறகு ஒரு வழியாக ஜாமீன் பெற்றார் செந்தில் பாலாஜி. அதே சமயம் இது தொடர்பான வழக்கை சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரித்து வருகிறது.
இந்த வழக்கு தொடர்பாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்கு எதிராகக் கடந்த 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12ஆம் தேதி அமலாக்கத்துறையினர் குற்றப்பத்திரிகை மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்தனர். கடந்த ஜனவரி 9 ஆம் தேதி இந்த வழக்கு தொடர்பான கூடுதல் குற்றப் பத்திரிக்கையை அமலாக்கத்துறை தாக்கல் செய்தது.
இந்த கூடுதல் குற்றப்பத்திரிக்கையில் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார் மற்றும் முன்னாள் உதவியாளர் சண்முகம், அரசு அதிகாரிகள் உட்பட 13 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் உள்ளிட்ட 13 பேருக்கும் சம்மன் அனுப்பட்டுள்ளது.