போஸ்டர்களால் பரபரப்பு..! ஹிந்தி திணிப்பை நிரூபித்தால் ரூ.99 லட்சம் பரிசு..!

தமிழக பா.ஜ., சார்பில், புதிய கல்விக் கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம் துவங்கப்பட்டுள்ளது. வீடு, வீடாகச் சென்று மக்களை சந்தித்து, இதுகுறித்து தெளிவுபடுத்தி கையெழுத்து பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ., செயலர் கார்த்தி, ஆன்மிக பிரிவு மாவட்ட துணை தலைவர் ஓசை சிவா ஆகியோர் சார்பில், திருப்பூரில் பல இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
அந்த போஸ்டரில், 'மோடி அரசின் மும்மொழி கல்விக் கொள்கையில் ஹிந்தி திணிப்பை கண்டுபிடித்தால், 99 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும். முதல் மொழி - தமிழ்வழிக் கல்வி கட்டாயம், இரண்டாம் மொழி - ஆங்கிலவழிக் கல்வி, மூன்றாம் மொழி - மாணவர்களின் விருப்பத் தேர்வு.
தி.மு.க., மந்திரி மகனுக்கு கிடைக்கும் கல்வி, ஏழை எளியவர்களின் மகனுக்கும் கிடைக்க கூடாதா; சி.பி.எஸ்.இ., பள்ளியில் கிடைக்கும் கல்வி, அரசுப் பள்ளி மாணவனுக்கு கிடைக்கக் கூடாதா?' என்றும் குறிப்பிட்டுள்ளனர்.